மகிந்தவின் பதவி விலகல் நாடகத்தால் அதிருப்தியடைந்த அமைச்சர்கள்!
சிறிலங்கா பிரதமர் மகிந்த ராஜபக்ச இன்று விசேட அறிக்கையொன்றை விடுத்து தனது பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், பிரதமர் மகிந்த ராஜபக்ச இன்று பதவி விலகாவிட்டால் நான்கு அமைச்சர்கள் பதவி விலகத் தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதற்கமைய, பிரசன்ன ரணதுங்க, ரமேஷ் பத்திரன, அலி சப்ரி மற்றும் நாலக கொடஹேவா ஆகியோர் தமது அமைச்சுப் பதவிகளை இராஜினாமா செய்யத் தயாராகி வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
புதிய பிரதமராக நியமிக்கப்படவுள்ள பல அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்களை பல்வேறு தரப்பினர் ஏற்கனவே முன்மொழிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் மயந்த திஸாநாயக்கவை தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்ய வைத்து, அவருக்கு பதிலாக முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு பிரதமர் பதவி வழங்க வேண்டும் என ஒரு தரப்பினர் கருத்து வெளியிட்டுள்ளனர்.
அதேவேளை சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உபதலைவர் நிமல் சிறிபால டி சில்வாவை புதிய பிரதமராக நியமிக்க வேண்டுமென வேறு சிலர் கருத்து தெரிவித்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.