உலக நாடுகளை ஏமாற்றும் சிறிலங்கா அரசாங்கம் - எமக்கான நீதி எங்கே!
சிறிலங்காவில் ஆட்சிக்கு வருகின்ற அனைத்து அரசாங்கமும் பாதிக்கப்பட்ட மக்களை காப்பாற்றுவதற்காகவும் நீதியை பெற்றுத் தருவதற்காகவும் செயல்ப் படவில்லை.
அவர்கள் தமது அரசினையும், தமது மக்களையும் இராணுவத்தையும் பாதுகாப்பதற்காகவும், பயங்கரவாதத்தை ஆதரித்து போர்க்குற்றத்தை மேற்கொண்டவர்களுக்கும் பாதுகாப்பு வழங்கி வருகின்றனர் என மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் குடும்பங்களின் சங்க தலைவி மனுவல் உதயச்சந்திரா தெரிவித்துள்ளார்.
மன்னாரில் இன்று காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
“நாங்கள் தொலைத்தது ஆடு, மாடுகளை இல்லை எமது பிள்ளைகளையே. நாங்கள் கையில் ஒப்படைத்த, வீடுகளில் வந்து பிடித்துச் சென்ற எமது பிள்ளைகளையே கேட்கிறோம்.
ஆனால் தற்போது காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகளுக்கு 2 லட்சம் ரூபாய் பணமும் மரண சான்றிதழும் வழங்க உள்ளதாக தெரிவிக்கின்றனர். ஏற்கனவே ஒரு லட்சம் ரூபாய் வழங்க உள்ளதாக தெரிவித்தனர்.
இனப்படுகொலைக்கு காரணம் தற்போதைய சிறிலங்கா அதிபர்
தற்போது அதற்கு வட்டியுடன் சேர்த்து 2 லட்சம் தருவதாக கூறுகின்றனர். நாட்டில் ஏற்பட்ட இனப்படுகொலைக்கு எமது பிள்ளைகள், உறவுகள் காணாமல் போனதற்கு காரணம் தற்போதைய சிறிலங்கா அதிபர்.
காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்காக அம்மாக்கள் வீதிகளில் நின்று போராடி வருகின்றனர். கையில் ஒப்படைக்கப்பட்ட, கண் முன்னே பிடித்துச் செல்லப்பட்ட நிலையில் காணாமல் ஆக்கப்பட்ட எம் உறவுகளை தேடி நாங்கள் வீதியில் நின்று போராடி வருகிறோம்.
இந்த போராட்டம் சுமார் 2 ஆயிரம் நாட்களையும் தாண்டியுள்ளது. எமக்கு நீதி வேண்டும். எமது பிள்ளைகளுக்கு என்ன நடந்தது என்றே நாங்கள் கேட்டுக்கிறோம்.
நாங்கள் அரசிடம் நிதி கேட்கவில்லை. இவர்கள் வழங்கவுள்ள 2 இலட்சத்தையும் நாங்கள் எதிர்பார்க்கவில்லை. நாங்கள் தொலைத்தது ஆடு,மாடுகளை இல்லை. எமது பிள்ளைகளையே.
உலக நாடுகளை ஏமாற்றும் அரசாங்கம்
நாங்கள் கையில் ஒப்படைத்த, வீடுகளில் வந்து பிடித்துச் சென்ற எமது பிள்ளைகளையே கேட்கிறோம். இறந்தவர்களை கேட்கவில்லை. இந்த சூழ்நிலையில் தற்போதைய அதிபர் ஆணைக்குழு ஒன்றை நியமித்துள்ளார்.
குறித்த ஆணைக்குழு வடக்கு கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளிடம் விசாரணைகளை முன்னெடுக்க உள்ளனர்.
இனியும் அவர்கள் என்ன விசாரணைகளை மேற்கொள்ள போகிறார்கள்? எமது பிள்ளைகள் எங்கே? என்ன நடந்தது என்றே கேட்கின்றோம். எங்களையும் ஏமாற்றி உலக நாடுகளையும் ஏமாற்றி ஜெனிவா கூட்டத்தொடர் இடம் பெறுகின்ற போது ஒவ்வொரு வருடமும் புதிது புதிதாக விடையங்களை சமர்ப்பிக்கின்றனர்.
மரண சான்றிதழ் வழங்க எத்தனிப்பு
எமது பிள்ளைகளை கொலை செய்துவிட்டு 2 லட்சம் ரூபாய் பணத்தையும் மரண சான்றிதழையும் வழங்க இந்த அரசு எத்தனிக்கிறது. நீங்கள் எங்களுக்கு 2 லட்சம் தர வேண்டாம்.
நாங்கள் உங்களுக்கு 4 லட்சம் தருகிறோம். எங்களது பிள்ளைகளுக்கு என்ன நடந்தது என்று கூறுங்கள்” என மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் குடும்பங்களின் சங்க தலைவி மனுவல் உதயச்சந்திரா தெரிவித்துள்ளார்.

