இன விடுதலை தேடி ஆரம்பமானது பொத்துவில் முதல் முள்ளிவாய்க்கால் வரையான நடைபவனி!
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தினை முன்னிட்டு இன்று ஞாயிற்றுக்கிழமை காலையில் பொத்துவில் தொடக்கம் முள்ளிவாய்க்கால் வரையிலான நடைபவனி ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வருகின்றது.
வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளால் முள்ளிவாய்க்காலில் இன்னுயிர்களை ஈர்த்த உறவுகளுக்கான முள்ளிவாய்க்கால் படுகொலை வாரம் அனுஸ்டிக்கப்பட்டு வருவதுடன் இன்று பொத்துவிலில் இருந்து முள்ளிவாய்க்கால் வரையில் பேரணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு மாகாண வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் அம்பாறை மாவட்ட தலைவி திருமதி தம்பிராசா செல்வராணி தலைமையில் பொத்துவில் பிரதேசசபைக்கு முன்பாக ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.
12ஆம் திகதி தொடங்கிய முள்ளிவாய்க்கால் படுகொலை வாரம் 18ஆம் திகதி முள்ளிவாய்க்காலில் நினைவு சுடர் ஏற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்படுவதுடன் நிறைவுபெறவுள்ளது.
இந்த நிலையில் தமிழ் மக்கள் மீது நடத்தப்பட்ட படுகொலைக்கு நீதியை சர்வதேச சமூகம் பெற்றுக்கொடுக்க வலியுறுத்தியும் இந்த படுகொலைகள் தொடர்பில் எதிர்கால தமிழ் சமூகம் அறிந்துகொள்ளும் வகையிலும் வருடாந்தம் முள்ளிவாய்க்கால் படுகொலை வாரம் எழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்த பேரணியில் வலிந்து காணாமல்ஆக்கப்பட்ட உறவுகளின் உறவினர்கள், சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள், மதத்தலைவர்கள் கலந்துகொண்டு ஆதரவு வழங்கி வருகின்றனர்.
இன்று காலை ஆரம்பமான இந்த பேரணியானது திருக்கோவில், அக்கரைப்பற்று, கல்முனை, களுவாஞ்சிகுடி ஊடாக கல்லடி பாலம் வரையில் சென்று இன்றைய தின முள்ளிவாய்க்கால் படுகொலை வார நிகழ்வு நடைபெறும்.
நாளைய தினம் மட்டக்களப்பிலிருந்து திருகோணமலை நோக்கி பயணம் ஆரம்பமாகும். 17ஆம் திகதி திருகோணமலையிலிருந்து முல்லைத்தீவினை சென்றடைந்து 18ஆம் திகதி முல்லைதீவிலிருந்து முள்ளிவாய்க்காலுக்கு சென்றடையும்.
அங்கு படுகொலை செய்யப்பட்ட உறவுகளின் நினைவு தினம் அனுஸ்டிக்கப்பட்டு நினைவேந்தல் வாரம் முடிவுக்கு கொண்டுவரப்படும்.
