பாடசாலை மாணவர்களை ஏற்றாது செல்லும் பேருந்துகள் - ஆத்திரமடைந்து வீதியை மறித்த பெற்றோர்!
பனிக்கன்குளம் கிராம அலுவலர் பிரிவிற்குட்பட்ட பாடசாலை மாணவர்களை பேருந்தில் ஏற்றாது சென்றமையால் ஆத்திரமடைந்த பெற்றோர் வீதி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இந்த போராட்டம் இன்று காலை இடம்பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட பனிக்கன்குளம் கிராம அலுவலர் பிரிவின் பனிக்கன்குளம், கிழவன்குளம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த சுமார் 60க்கும் மேற்பட்ட மாணவர்கள் மாங்குளம் மகாவித்தியாலயத்தில் கல்வி கற்று வருகின்றனர்.
இந்த ஊர்களுக்கும் பாடசாலைக்கும் இடையில் சுமார் பத்து கிலோமீற்றர் இடைவெளி காணப்படுகிறது. இவ்வாறான நிலையில், பேருந்துக்காக காத்திருக்கும் மாணவர்களை ஏற்றாமல் செல்லும் செய்பாடு தொடர்ந்து கொண்டே இருப்பதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
அரச மற்றும் தனியார் பேருந்துகளால் பாதிக்கப்படும் மாணவர்கள்

மாணவர்கள் பாடசாலைக்கு செல்ல வேண்டியுள்ள ஏ -9 வீதியூடாக பல போக்குவரத்து சேவைகள் இடம்பெறுகின்ற போதும் பாடசாலை மாணவர்களுக்கான சேவையை வழங்குவதில் பேருந்து சாரதிகள் நடத்துனர்கள் சரியாக செயல்படவில்லை என மக்கள் தொடர்ச்சியாக குற்றம் சுமத்தி வருகின்றனர்.
மாணவர்கள் வீதியில் நின்று பேருந்தை மறிக்கும் போதும் அவர்களை ஏற்றாது செல்கின்ற அரச மற்றும் தனியார் பேருந்துகளால் மாணவர்கள் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இதன் காரணமாக பாடசாலைக்கு உரிய நேரத்திற்கு செல்லவோ, பாடசாலையிலிருந்து மீண்டும் உரிய நேரத்திற்கு வீடு திரும்பவோ முடியாத நிலைமையில் மாணவர்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.
பொதுமக்களுக்கும் அசௌகரியம்

இந்த விடயம் தொடர்பில் தொடர்ச்சியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பலருக்கு தெரியப்படுத்தியும் ஊடகங்களில் பல்வேறு தடவைகள் இந்த விடயம் தொடர்பில் சுட்டிக் காட்டப்பட்டும் இதுவரை இந்த பிரச்சனை தீர்க்கப்படாத பிரச்சினையாகவே காணப்படுகிறது எனவும் பெற்றோர் விசனம் வெளியிட்டுள்ளனர்.
குறிப்பாக மாணவர்கள் மாத்திரமன்றி குறித்த கிராமங்களில் இருந்து மாங்குளம் நகரத்திற்கு செல்கின்ற பொதுமக்கள் வயோதிபர்கள் நோயாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரையும் பேருந்துகள் ஏற்றிச் செல்லாத காரணத்தினால் பல்வேறு இன்னல்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.
பல்வேறு இடங்களிலும் பேருந்து சேவைகள் குறைவாக காணப்படுவதால், பயணிகள் பயணத்தை மேற்கொள்ள முடியாமல் சிரமப்படுகின்றனர். ஆனால் இந்த வீதியிலே அதிகளவான பேருந்து சேவைகள் இடம்பெறுகின்ற போதும், பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லலாமையானது பொதுமக்கள் மத்தியில் பாரிய விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.
உரிய நேரத்திற்கு பாடசாலை செல்ல முடியாத நிலை

இது தொடர்பில் கடந்த 22.08.2022 அன்றும் மக்கள் போராட்டம் இடம்பெற்றது. அதன் போது, பேருந்துகள் தொடர்ச்சியாக பாடசாலை மாணவர்களை ஏற்றாது செல்வதாகவும், மாணவர்களை ஏற்றினாலும் பேருந்தின் நடத்துனர்கள் சாரதிகள் மாணவர்களை ஏசுவதாகவும் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறான பல்வேறு இன்னல்களுக்கு முகம் கொடுத்து மாணவர்கள் உரிய நேரத்திற்கு பாடசாலை சென்று வீடு திரும்பி வர முடியாத நிலை காணப்படுவதாகவும் மக்கள் ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தனர்.
எனவே இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு இந்த வீதியில் இடம் பெறுகின்ற பேருந்து சேவைகள் அனைத்திலும் மாணவர்கள் இலகுவாக பாடசாலைக்கு சென்று வரக்கூடிய வகையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருந்தனர்.
அதற்கமைய ஒரு கிழமைக்குள் சரியான நடவடிக்கைகள் எடுக்கப்படாத பட்சத்தில் வருகின்ற கிழமை ஏ-9 வீதியை பனிக்கன்குளம் பகுதியிலே மறித்து எந்த ஒரு வாகனத்தையும் செல்ல விடாது தடுத்து பாரிய ஆர்ப்பாட்டத்தை செய்ய வேண்டிய நிலைமை ஏற்படும் எனவும் பொதுமக்கள் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.
பரீட்சைக்கு செல்ல முடியாது தவித்த மாணவர்கள்

அதனையடுத்து 22.08.2022 முதல் 26.08.2022 வரை வடமாகாண இலங்கை போக்குவரத்து சபை உத்தியோகத்தர்கள் பனிக்கன்குளம் பகுதியில் கண்காணிப்பு நடவடிக்கைக்காக அமர்த்தப்பட்டு அந்த கிழமை முழுவதும் அனைத்து மாணவர்களையும் பேருந்துகள் ஏற்றி சென்றன.
அதன் பின்னர் கடந்த வாரம் மீண்டும் மாணவர்களை பேருந்துகள் ஏற்றாமல் சென்றுள்ளன. இவ்வாறான நிலையில் இன்று காலை முதல் பாடசாலையில் பரீட்சையில் கலந்து கொள்ள வேண்டிய மாணவர்கள் அதிகாலை 6.40 மணிமுதல் வீதியில் நின்று 8 மணியை கடந்தும் பேருந்துகள் எவையும் ஏற்றி செல்லாத காரணத்தினால் பெற்றோர் ஏ9 வீதியை மறித்து போராட்டம் நடத்தினர்.
இதன் பின்னர் சம்பவ இடத்திற்கு சென்ற மாங்குளம் காவல்துறையினர் வீதி மறியலை விடுமாறும் மக்களை வந்து முறைப்பாடு பதிவு செய்யுமாறும் தெரிவித்துள்ளனர்.
நீதிமன்ற ஊடாக நடவடிக்கை

அதுமட்டுமன்றி இது தொடர்பில் தாங்கள் நீதிமன்றம் ஊடாக நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்ததை தொடர்ந்து மக்கள் வீதிமறியல் போராட்டத்தை கை விட்டனர். சுமார் ஒரு மணித்தியாலத்தின் பின்னர் போக்குவரத்து வழமைக்கு திரும்பியது.
இதன்பின்னர் மக்கள் மாங்குளம் காவல் நிலையம் சென்று முறைப்பாடு பதிவு செய்துள்ளனர். தொடர்ந்தும் தீர்வில்லையேல் முழுமையாக வீதியை மறித்து போராட்டம் செய்வோம் என்று மக்கள் தெரிவித்துள்ளனர்.













