சிறுமி ஆயிஷாவின் மரணத்திற்கு நீதி கோரி போராட்டம்!
சிறுமி ஆயிஷா வின் மரணத்திற்கு நீதி கோரி மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இன்று செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணியளவில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
வடக்கு கிழக்கு பெண்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நீதிக்கான போராட்டம் வடக்கு கிழக்கில் உள்ள 8 மாவட்டங்களில் இன்றைய தினம் இடம்பெற்றது.
குறித்த போராட்டத்தில் பெண்கள் அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளடங்கலாக பல நூற்றுக்கணக்கான பெண்கள், இளைஞர்கள், சமூக ஆர்வலர்கள் பெண்கள் வலையமைப்பினர், சமுக ஆர்வலர் மற்றும் சிவில் சமுக செயற்பாட்டாளர்கள் ஒன்றிணைந்து குறித்த போராட்டத்தை முன்னெடுத்தனர்.
சிறுமி ஆயிஷாவின் மரணத்திற்கு நீதி கோரியும் தொடர்ச்சியாக நாட்டில் இடம் பெறும் சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுக்கவும் அவ்வாறான செயற்பாடுகளால் பாதிக்கப்படும் பெண்கள் சிறுவர்களுக்கு விரைவில் நீதி நிலை நாட்டப்படவேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி போராட்டம் இடம்பெற்றது.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டமையும் குறிப்பிடத்தக்கது.