சிறிலங்கா கடற்படையின் தொடர் கைது - போராட்ட களமாகமாறவுள்ள தமிழகம்!
சிறிலங்கா கடற்படையினரின் தொடர் கைது நடவடிக்கையை கண்டித்து ராமேஸ்வரம் கடற்தொழிலாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
அதேநேரம் நாளை தமிழக கடற்தொழிலாளர்களின் விடுதலையை வலியுறுத்தி போராட்டம் நடத்தவுள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
சிறிலங்கா கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் கடற்தொழிலாளர்கள் 15 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
போராட்டம்

இந்த நிலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழக கடற்தொழிலாளர்களையும் அவர்களது படகுகளையும் உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தி ராமேஸ்வரம் பகுதி கடற்தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டம் நடத்தவுள்ளதாக நேற்று அறிவித்தனர்.
இதற்கமைய தமிழக கடற்தொழிலாளர்களின் விடுதலையை வலியுறுத்தி இன்று வேலை நிறுத்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
வேலைநிறுத்த போராட்டம் காரணமாக 800க்கும் மேற்பட்ட விசைப்படகுகள், ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டு படகுகள், கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
அத்துடன் நாளைய தினம் தங்கச்சிமடம் பேருந்து நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளதாகவும் அவர்கள் அறிவித்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் போராட்டம்

மேலும் 21 ஆம் திகதிக்குள் மீனவப் பிரதிநிதிகள் தமிழக முதல்வரை சந்திக்க அனுமதி வழங்க வேண்டும் என கோரியும், தமிழக அரசின் துணையோடு கடற்தொழில் அமைப்புகள் வெளியுறவுத்துறை அமைச்சரை நேரில் சந்திக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத பட்சத்தில் உலக கடற்தொழிலாளர் தினமான 22ஆம் திகதி தொடருந்து மறியல் போராட்டம் மற்றும் தமிழகம் முழுவதும் உள்ள கடற்தொழிலாளர்களை ஒருங்கிணைத்து மாநிலம் தழுவிய தொடர் போராட்டங்களை நடத்த உள்ளதாகவும் ராமேஸ்வரம் கடற்தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.