நீர்கொழும்பு சிறைச்சாலையை உலுக்கிய கொடூர மோதல்...! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்டுள்ள கொடூர வன்முறைச் சூழ்நிலையானது நாட்டின் ஏனைய சிறைச்சாலைகளுக்குள்ளும் வெடிப்பதற்கான பாரிய அபாயம் காணப்படுவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
கைதிகள் உரிமைகளைப் பாதுகாக்கும் குழுவின் (PRC) அழைப்பாளர் சுதேஷ் நந்திமால சில்வா இதனை தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அதிகப்படியான நெருக்கடி
சிறைச்சாலைக் கட்டமைப்பிற்குள் காணப்படும் அதிகப்படியான நெருக்கடியும் (Overcrowding) குறைந்தபட்ச வசதிகள் இல்லாமையுமே இவ்வாறான மோதல்களுக்கு அடிப்படைக் காரணம் எனச் சுட்டிக்காட்டிய அவர், நீர்கொழும்பு சிறைச்சாலையின் தற்போதைய அவல நிலையை விவரித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அவர், நீர்கொழும்பு சிறைச்சாலையில் 600 முதல் 650 கைதிகளை மட்டுமே தடுத்து வைக்க முடியும் ஆனால் தற்பொழுது அங்கு 2000 இற்கும் அதிகமானோர் அடைக்கப்பட்டுள்ளனர்.

கழிவறை வசதிகள் கூட 250 அல்லது 300 கைதிகளுக்கு ஒன்று என்ற மிகக் குறைந்த மட்டத்திலேயே உள்ளன.
சில கைதிகள் கழிவறைக்குள்ளேயே உறங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இவ்வாறான மனிதாபிமானமற்ற சூழலால் கைதிகள் மட்டுமன்றி அதிகாரிகளும் கடுமையான மன அழுத்தத்திற்கு ஆளாகியுள்ளனர்.
கடத்தல்காரர்கள்
சிறைச்சாலை நிர்வாகத்தைக் கட்டுப்படுத்துவதற்குத் தேவையான உத்தியோகத்தர்களின் எண்ணிக்கையில் தற்பொழுது நான்கில் ஒரு பகுதியினரே (1/4) கடமையில் ஈடுபட்டுள்ளனர்.
அத்துடன் எவ்வித வகைப்படுத்தலும் இன்றி போதைப்பொருள் பழக்கத்திற்கு அடிமையானவர்களையும் கொடூரக் குற்றவாளிகளையும் ஒரே இடத்தில் அடைத்து வைத்துள்ளதே இந்த மோதல்கள் தீவிரமடையக் காரணம்.

இந்தச் சம்பவத்தைப் போதைப்பொருள் கடத்தல்காரர்களின் மோதலாகக் சித்தரித்து உண்மையான பிரச்சினையை மூடிமறைக்க அரசாங்கம் முயற்சிக்கின்றது.
கடந்த காலங்களில் பிந்துனுவெவ, வெலிக்கடை மற்றும் மஹர சிறைச்சாலைகளில் நடந்த படுகொலைகளின் போதும் அரசாங்கம் பல்வேறு முத்திரைகளைக் குத்தி தனது பொறுப்பில் இருந்து தப்பியோடியன.
சிறைச்சாலைகளுக்குள் நிலவும் இந்த நெருக்கடி நிலைக்கு அரசாங்கம் முறையான தீர்வை வழங்கத் தவறினால் கைதிகள் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகளின் உறவினர்களை ஒன்றிணைத்து வீதியில் இறங்கிப் பாரிய போராட்டங்களை முன்னெடுக்க வேண்டி வரும்” என அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |