அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் ரணில்..!
ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தில் மேலும் 12 அமைச்சர்கள் நியமனம் பெறவுள்ளதாக அரசியல் வட்டாரத்தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கையின் புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்க கடந்த 21 ஆம் திகதி நாடாளுமன்ற கட்டடத்தொகுதியில் பதவிப் பிரமாணம் செய்திருந்த நிலையில் 22 ஆம் திகதி காலை பிரதமராக தினேஷ் குணவர்தன பிரதமர் அலுவலகத்தில் பதவிப்பிரமாணம் செய்திருந்தார்.
இதேவேளை, கடந்த 22 ஆம் திகதி 18 அமைச்சர்கள் பதவிப்பிரமாணம் செய்து கொண்டனர். முக்கிய அமைச்சுக்களாக குறிப்பிடும் போது கல்வி, சுகாதாரம், நீதி, வெளிவிவகாரம், பொதுமக்கள் பாதுகாப்பு போன்ற அமைச்சுப்பதவிகளுக்கு நியமனங்கள் வழங்கப்பட்டன.
அமைச்சர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படலாம்
இருப்பினும், தற்பொழுது அமைச்சரவை அமைச்சர்களின் எண்ணிக்கை 30 ஆக அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எதிர்வரும் இரண்டு வாரங்களில் இவ்வாறு புதிய அமைச்சர்கள் நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஹரின் பெர்னாண்டோவின் கருத்து
இந்த விடயம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துரைத்த அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ, தற்போதுள்ள இடைக்கால அமைச்சரவையில் எதிர்வரும் இரண்டு வாரங்களில் மாற்றம் ஏற்படுத்தப்படும் என குறிப்பிட்டார்.
இதேவேளை, அமைச்சரவையில் மாற்றம் ஏற்படுத்தி அதிபர் ரணில் விக்ரமசிங்க தேசிய அரசாங்கம் ஒன்றுக்கு செல்வார் என எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.