தென்னிலங்கையில் மற்றுமொரு குண்டுத்தாக்குதல் எச்சரிக்கை - காவல்துறைமா அதிபர் கடிதம்!
இலங்கையின் வடக்கு, கிழக்கு அல்லது தென்னிலங்கையில் ஜூலை 5 அல்லது 6 ஆம் திகதிகளில் குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்படலாம் என பாதுகாப்புச் செயலாளருக்கு, காவல்துறைமா அதிபர் எச்சரிக்கை கடிதம் அனுப்பியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க இன்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் கரும்புலிகள் நினைவேந்தல் நிகழ்வுகளை குறிக்கும் வகையில் குறித்த இரண்டு தினங்களிலும் சர்வதேச உளவு அமைப்புக்களின் பங்களிப்புடன் குண்டுத் தாக்குதல் நடத்தப்படலாம் என குறித்த கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாகவும் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
சிறிலங்காவின் பாதுகாப்பு செயலாளர் ஒய்வுபெற்ற ஜெனரல் கமல் குணரத்னவிற்கு சிறிலங்கா காவல்துறைமா அதிபர் சி.டி.விக்ரமரத்ன, கடந்த 27 ஆம் திகதி கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.
கடந்த 29 ஆம் திகதி பாதுகாப்பு அமைச்சினால் பெற்றுக்கொள்ளப்பட்ட குறித்த கடிதத்தின் சில பகுதிகளை வாசித்த அனுரகுமார திஸாநாயக்க, கடிதத்தில் ஜுலை 05 மற்றும் 06 ஆம் திகதிகளில் நடைபெறும் எந்தவொரு நிகழ்வுகளிலும் பங்குபற்ற வேண்டாம் என வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள சர்வதேச அமைப்புகளுடன் தொடர்புடைய அதிகாரிகள் மற்றும் பொதுமக்களை எச்சரித்துள்ளதாக சுட்டிக்காட்டினார்.
இந்தத் தகவல்கள் எப்படி, எங்கிருந்து பெறப்பட்டன என்பதையும், அவ்வாறான தாக்குதல் நடத்த வாய்ப்பு உள்ளதா என்பதையும் சிறிலங்கா அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
தற்போது நாடளாவிய ரீதியில் இடம்பெற்று வரும் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களையும் உணர்வுகளையும் நசுக்கவே இவ்வாறான செய்திகள் பகிரப்படுகின்றன என்ற சந்தேகம் இருப்பதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் திஸாநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.