சிறிலங்கா அதிபர் தேர்தலைப் புறக்கணித்த தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி!
சிறிலங்காவின் புதிய அதிபரைத் தெரிவு செய்யும் வாக்கெடுப்பு நாடாளுமன்றில் இடம்பெறும் நிலையில், தமித்தேசிய மக்கள் முன்னணியின் பொது செயலாளர் செல்வராசா கஜேந்திரன் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை.
இதேவேளை அக்கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை.
புதிய அதிபர் வேட்பாளர்களை அண்மையில் சந்தித்து கலந்துரையாடிய தமிழ்த்தேசி மக்கள் முன்னணி, தமிழ் மக்களின் அரசியல் தீர்வுக்கான திட்டம் தொடர்பில் பேசியுள்ளது.
வாக்களிப்பை புறக்கணித்த கஜேந்திரன் மற்றும் கஜேந்திரகுமார்
இருப்பினும் எந்த வேட்பாளர்களும் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை தீர்ப்பதற்குரிய தீர்வுத் திட்டங்களை ஏற்றுக்கொள்வதற்கு தயார் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆகவே இன்றைய புதிய அதிபர் தேர்தலுக்கான வாக்களிப்பில் தமது கட்சி கலந்துகொள்ளாது தேர்தலை புறக்கணிப்பதாக ஊடக சந்திப்பின் மூலம் தெரிவித்திருந்தனர்.
இவ்வாறான நிலையிலேயே இன்றைய வாக்கெடுப்பில் அவர்கள் கலந்துகொள்ளவில்லையென்பதும் குறிப்பிடத்தக்கது.