அடுத்த மக்கள் எழுச்சி எமது தலைமையின் கீழே - சிறிலங்கா அரசாங்கத்திற்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை!
இரண்டாவது மக்கள் எழுச்சி தேசிய மக்கள் சக்தியின் தலைமைத்துவத்தின் கீழேயே உருவாகும் என்று ஜே.வி.பி தலைவர் அனுரகுமார திஸாநாயக்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அகுரஸ்ஸ நகரில் நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் கூட்டமொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
“எங்களின் அரசாங்கத்தின் கீழ் அனைத்து தொழில் முயற்சியாளர்கள், தொழிற்துறையினர் மற்றும் முதலீட்டாளர்களுக்கு சிறந்த கௌரவமும், ஆனால் டீல் காரர்களுக்கு இடமளிக்கப்படாது என்பதனையும் உறுதியாக கூறுகின்றோம்.
வெளியே வரமுடியாத நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள்
இப்போது நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மரண வீடுகள் உள்ளிட்ட எந்தவொரு நிகழ்வுக்கும் வர முடியாத நிலைமையே காணப்படுகின்றது. இவ்வளவு காலமாக மக்களுக்கு அவர்களிடம் செல்ல முடியாது இருந்தது.
இப்போது அவர்களுக்கு மக்களிடம் செல்ல முடியவில்லை. அப்படியாயின் பலம் மக்களிடமே உள்ளது. இதனால் பரந்து காணப்படும் பலத்தை ஒன்றிணைக்க வேண்டும்.
போராட்டத்தின் மூலம் கிடைக்க வேண்டிய உயர்ந்த வெற்றியை மக்களுக்கு பெற்றுக்கொள்ள முடியாது போயுள்ளது. ஆனால் இரண்டாவது எழுச்சி தேசிய மக்கள் சக்தியின் தலைமைத்துவம் மற்றும் வழிநடத்தலின் கீழேயே ஏற்படும் என்பதனை நினைவில் கொள்ள வேண்டும்.
கோபம் வேதனையை வெளிப்படுத்த வேண்டும்
இதற்காக நாங்கள் ஒன்றிணைய வேண்டும். ஒவ்வொரு இடத்தில் கொடிகளை பிடித்துக்கொண்டு இருந்து பலனில்லை. தங்களின் கோபம் வேதனை ஆகியவற்றை அதன்மூலம் வெளிப்படுத்தலாம்.
ஆனால் பிரச்சினையில் இருந்து விடுபட வேண்டுமாயின் ஒன்றிணைந்த மக்கள் சக்தியை ஏற்படுத்த வேண்டும்” எனவும் தெரிவித்துள்ளார்.