பீரிஸின் பதவியை பறிக்க மகிந்தவிடம் கோரிக்கை
மொட்டுக் கட்சியின் தவிசாளர் பதவியிலிருந்து பேராசிரியர் ஜி.எல். பீரிஸை நீக்குவதற்கு அக்கட்சியின் கட்சித் தலைவரான மகிந்த ராஜபக்சவிடம் கோரிக்கை விடப்பட்டுள்ளது.
மேலும், இது தொடர்பில் கலந்துரையாடி முடிவொன்றை எடுப்பதற்காக 'மொட்டு'க் கட்சியின் விசேட கூட்டம் விரைவில் இடம்பெறவுள்ளது என்று கட்சி வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
ரணிலுக்கு ஆதரவு
சிறிலங்கா அதிபரைத் தெரிவுசெய்வதற்காக நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பின்போது, ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு வழங்க வேண்டும் என்று சிறிலங்கா பொதுஜன முன்னணி கட்சி தீர்மானித்திருந்தது.
இந்நிலையில், கட்சியின் பொதுச்செயலாளரால் இது தொடர்பில் அதிகாரபூர்வமாக அறிக்கையும் வெளியிடப்பட்ட போதிலும் கட்சியின் தவிசாளரான ஜி.எல். பீரிஸ், டலஸ் அழகப்பெருமவுக்கு ஆதரவு வழங்கி, அவரின் பெயரையும் வழிமொழிந்தார்.
தற்போது டலஸ் அணியில் முக்கிய நபராக அவர் திகழ்கின்றார்.
நாடாளுமன்ற உறுப்பினர்களால் கோரிக்கை
சிறிலங்கா பொதுஜன முன்னணியின் 16 பேர் கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு டலஸ் அழகப்பெரும தலைமையில், சுயாதீனமாகச் செயற்பட்டு வருகின்றது.
இவ்வாறானதொரு பின்புலத்திலேயே பீரிஸிடமிருந்து தவிசாளர் பதவியைப் பறிக்குமாறு, கட்சித் தலைமையிடம் அக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, டலஸ் அணியில் செயற்படும் உறுப்பினர்களிடமிருந்து 'மொட்டு'க் கட்சியின் தொகுதி அமைப்பாளர் பதவியும் பறிக்கப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.