நாட்டில் 220 இலட்சம் மக்களின் வாழ்க்கையுடன் நாங்கள் விளையாடவில்லை - சஜித் தெரிவிப்பு
இந்நாட்டிலுள்ள 220 இலட்சம் மக்களின் வாழ்க்கையோடு தாம் விளையாடவில்லை எனவும்,அவர்களின் வாழ்க்கையை மரண விழிம்புக்குக் கொண்டு செல்ல செயற்படவில்லை எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
வரலாற்றில் சிலர் நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் எவ்வாறு துரோகம் இழைத்தார்கள் என்பதை இந்நாட்டு மக்கள் அறிவார்கள் என்பதை நினைவூட்டிய எதிர்க்கட்சித் தலைவர்,அத்தகைய சம்பிரதாய எதிர்க்கட்சியின் வகிபாகத்தை ஐக்கிய மக்கள் சக்தி நிலைப்படுத்தவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
சர்வதேச நாணய நிதியம் எவ்வாறான நிபந்தனைகளை முன்வைத்துள்ளது என்பதை அறிந்து கொள்ளும் உரிமை தனக்கும் நாட்டு மக்களுக்கும் உள்ளதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், சர்வதேச நாணய நிதியத்தின் முன்மொழிவுகள் குறித்து ரணில் விக்ரமசிங்க பசில் ராஜபக்சவிடம் கேள்வி எழுப்பிய விதம் குறித்தும் அவர் நினைவு கூர்ந்தார்.
எதிர்க்கட்சிகளின் ஆதரவு
நிதிக் குழுவிற்கு ஹர்ஷ டி சில்வாவை நியமிக்குமளவிற்கு உண்மையான தேவைப்பாடு கூட இல்லாத அரசாங்கத்திற்கு எதிர்க்கட்சிகளின் ஆதரவை எவ்வாறு கோருவது எவ்வாறு என கேள்வி எழுப்பிய எதிர்க்கட்சித் தலைவர், அன்று சர்வதேச நாணய நிதியம் என்று சொல்லக்கூட அஞ்சிய மொட்டுத் தரப்பினர் இன்று சர்வதேச நாணய நிதியத்தின் அடிமைகளாக மாறியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார் .
