பெரும்பான்மை ரணிலிடம்: பதவியேற்கும் தற்காலிக அரச தலைவர்!
தேர்தலை நடத்துவதற்கு தீர்மானம்
அரச தலைவர் மற்றும் நாடாளுமன்ற தேர்தலை நடத்துவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுள்ளது.
அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச தனது பதவி விலகல் கடிதத்தை நாடாளுமன்ற சபாநாயகரிடம்கையளித்ததன் பின்னர் எதிர்வரும் மார்ச் மாதத்திற்கு முன்னதாக அரச தலைவர் மற்றும் நாடாளுமன்ற தேர்தலை நடத்துவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அரசியல் தரப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்நிலையில் குறிப்பிடப்படாத இடத்தில் தங்கியிருக்கும் கோட்டாபய ராஜபக்ச எதிர்வரும் புதன்கிழமை பதவி விலகுவார் என சபாநாயகர் கடந்த சனிக்கிழமை இரவு அறிவித்திருந்தார்.
ரணில் விக்ரமசிங்கவிடமும் உறுதி
கோட்டாபய ராஜபக்ச முன்னர் அறிவித்தபடி வரும் 13ம் திகதி பதவி விலகுவதாக இன்று காலை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடமும் உறுதிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நேற்று மாலை வரை அரசியல் கட்சிகளுக்குள் நடைபெற்ற விவாதங்களைத் தொடர்ந்து, ரணில் விக்ரமசிங்க, நாடாளுமன்றத்தில் கிட்டத்தட்ட 115 ஆசனங்களைப் பெரும்பான்மையாகக் கொண்டிருக்கிறார் என்பது வெளிப்படுத்தப்பட்டது.
சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருப்பதால், அதனை கைவிடவேண்டாம் என்றும், அரச தலைவர் பதவியை ஏற்குமாறு பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவரிடம் கோரியுள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கது.
ரணிலின் கனவு
நாடாளுமன்ற உறுப்பினர்களின் கோரிக்கை நிறைவேறுமானால் இதுவரை காலமும் அரச தலைவர் பதவி மீது இலக்கு வைத்திருந்த ரணிலின் கனவு பலிக்கும் என பரவலான கருத்துப் பரிமாற்றங்கள் இடம் பெற்றன.
எனினும் காலிமுகத்திடல் போராட்டக்காரர்களின் எதிர்ப்புகளுக்கு மத்தியில் அவர், அரச தலைவர் பதவியை ஏற்பாரா என்ற கேள்வியும் பரவலாக அரசியல் வட்டாரங்கள் இடையே எழுந்துள்ளது.
இதற்கிடையே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும் சனிக்கிழமை கலவரத்தின் பின்னர் தனித்தனியாக கலந்துரையாடல்களை நடத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பிரதமர் வேட்பாளராக டளஸ்
இந்தநிலையில் அவர் அரசத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டால், பிரதமர் வேட்பாளராக டலஸ் அழகப்பெரும நியமிக்கப்படுவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனினும், நேற்று மாலை வரை, சஜித் நாடாளுமன்றத்தின் பெரும்பான்மை ஆதரவைப் பெறவில்லை என்பதும் ரணில் விக்ரமசிங்க பதவியில் தொடர்ந்தால், ராஜபக்சவின் பதவி விலகலைத் தொடர்ந்து அவர் புதன்கிழமை அரச தலைவராக பதவியேற்பார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அத்துடன் அரச தலைவர் தேர்தல் நடைபெறும் வரை, அவர் சர்வதேச நாணய நிதியத்துடன் ஒரு ஒப்பந்தத்தை இறுதி செய்து சில வகையான பொருளாதார இயல்புகளை மீட்டெடுப்பதில் கவனம் செலுத்துவார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
30 நாட்களுக்கு தற்காலிக அரச தலைவர்
விக்ரமசிங்கவின் பிரதமர் வேட்பாளர் யார் என்பது இன்னும் நிச்சயமற்ற நிலையில் உள்ளது, ஆனால் அவர் பொருத்தமான வேட்பாளரை பரிந்துரைக்க நாடாளுமன்றின் உதவியை நாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை ரணில் விக்ரமசிங்க பதவி விலகினால், நாடாளுமன்ற சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன 30 நாட்களுக்கு தற்காலிக அரச தலைவராக புதன்கிழமை பதவியேற்பார் என தெரிவிக்கப்படுகின்றது.
இதன் போது நாடாளுமன்றம் புதிய அரச தலைவரை தெரிவு செய்யும் எனவும் பெரும்பான்மை ஆதரவைக் கொண்ட எந்தவொரு வேட்பாளரும் அரச தலைவராக நியமிக்கப்படுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று மாலை அமைச்சரவை கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கும் பிரதமர்
இந்த வாரம் நாட்டிற்கு வரவுள்ள எரிபொருள் ஏற்றுமதி மற்றும் வெளிநாட்டு பிரதிநிதிகள் குறித்து கலந்துரையாடவுள்ளார்.
அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச காணொளி மூலமாக அமைச்சரவை கூட்டத்தில் இணைய வாய்ப்பிருக்கிறது என தெரிவிக்கப்படுன்றது.
அமைச்சர்களின் பதவி விலகல் கடிதங்கள் எதுவும் அரச தலைவரால் ஏற்றுக்கொள்ளப்படாததால், அவர்கள், தங்கள் பொறுப்புக்களில் நீடிப்பார்கள் என்று தெரியவருகிறது.
முன்னதாக ஹரீன் பெர்னாண்டோ, மனுஷ நாணயக்கார, தம்மிக்க பெரேரா மற்றும் பந்துல குணவர்தன ஆகியோர் தமது அமைச்சுப் பதவிகளில் இருந்து விலகினர்.
எனினும் இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் பங்கேற்குமாறு அவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.