பற்றி எரியும் நிலையில் இலங்கை! மாலைதீவில் சொகுசு விடுதியில் சிறப்பாக இருக்கும் கோட்டாபய
இலங்கையில் பொருளாதார நிலைமை படுமோசமாகியுள்ள நிலையில், போராட்டத்தினால் தலைநகர் பற்றி எரிந்து கொண்டிருக்கையில், அதிபர் கோட்டாபய ராஜபக்ச மாலைதீவில் சொகுசு பங்களாவில் உல்லாசமாக தனது பொழுதுகளை கழித்துக்கொண்டிருப்பதாக இந்திய ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
கோட்டாபய தனது மனைவி மற்றும் இரண்டு பாதுகாப்பு உத்தியோகத்திருடன் விமானப்படை மூலம் நேற்று அதிகாலை மாலைதீவுக்கு தப்பி ஓடிய நிலையில், பதில் அதிபராக ரணில் விக்ரமசிங்கவை காணொளி பதிவின் மூலம் நியமித்தார்.
எனினும் கோட்டாபயவின் பதவி விலகல் தாமதமானது மட்டுமன்றி பதில் அதிபராக ரணிலை நியமித்தமையானது போராட்டகாரர்களை மேலும் ஆவேசமடையச் செய்தது.
பற்றி எரியும் இலங்கை
இதனால் அரசாங்கத்திற்கு எதிராக பொதுமக்கள் திரண்டு அதிபர் மாளிகை, அதிபர் செயலகம், பிரதமர் மாளிகை மற்றும் தேசிய ஊடகம் என்பன கைப்பற்றி கோட்டா மற்றும் ரணிலை பதவி விலகுமாறு கொழும்பு முழுவதும் பெரும் போராட்டங்கள் வெடித்ததுடன் போராட்டக்காரர்கள் அதிகளவில் ஒன்று குவிந்து தமது எதிர்ப்பை காட்டினர்.
இன்னமும் சிறிலங்காவின் அதிபராக இருக்கும் கோட்டாபய கொழும்பில் இருந்து 700 கிலோ மீற்றர் தொலைவில் இருந்தும் இலங்கையின் நெருக்கடியை கருத்தில் கொள்ளாமல் இருப்பது கவலைக்கிடமானது என்று இந்திய ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.