மகிந்த பதவி விலக வேண்டும்! விதிக்கப்படும் கடுமையான நிபந்தனை
பிரதமர் மகிந்த ராஜபக்ச பதவி விலகி, இடைக்கால அரசாங்கத்தை அமைக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், எதிர்க்கட்சி கொண்டு வந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவளிப்பது தொடர்பாக நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக இயங்கும் 42 நாடாளுமன்ற உறுப்பினர்களின் அணி கவனம் செலுத்தி வருவதாக அரசியல் தரப்புத் தகவல்கள் கூறுகின்றன.
இந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் அணி, ஐக்கிய மக்கள் சக்தியுடன் இது சம்பந்தமாக சில சுற்றுப் பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளதாக தெரியவருகிறது.
நம்பிக்கையில்லா தீர்மானத்தில் வெற்றி பெற்றால், புதிதாக இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கான திட்டம் சம்பந்தமாகவும் இந்த அணியினர் கலந்துரையாடி வருவதாக கூறப்படுகிறது.
உத்தேச இடைக்கால அரசாங்கத்தின் அமைச்சரவையின் எண்ணிக்கை 20 பேருக்கும் குறைவாக இருக்க வேண்டும் என யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
அதேவேளை இடைக்கால அரசாங்கத்தை அமைத்த பின்னர், நெருக்கடிக்கு தீர்வுகாணும் நோக்கில் வெளிநாட்டு தூதுவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவும் சுயாதீன அணியினர் தீர்மானித்துள்ளனர். இதன் முதல் கட்டமாக இலங்கைக்கான ரஷ்ய தூதுவரை வியாழக் கிழமை சந்தித்துள்ளதுடன் சீனத் தூதுவரையும் நேற்று சந்தித்து, இந்த விடயம் சம்பந்தமாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
பிரதமர் மகிந்த ராஜபக்ச பதவி விலகி, புதிய பிரதமரின் கீழ் இடைக்கால அரசாங்கம் அமைக்கப்பட வேண்டும் என இந்த அணியினர் தொடர்ந்தும் அரசாங்கத்தை வலியுறுத்தி வருகின்றனர்.
எனினும் அரசாங்கம் இதற்கு சாதகமான பதிலை இதுவரை வழங்கவில்லை.
இதன் காரணமாக அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவு வழங்க நேரிடும் என அந்த அணியின் சிரேஷ்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.