ரணிலின் வெளிநாட்டு பயணத்திற்கு பின்னர் சிறிலங்காவின் அரசியலில் ஏற்படவுள்ள பாரிய மாற்றம்..!
பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச் சடங்கில் கலந்துக்கொள்ள அதிபர் ரணில் விக்ரமசிங்க இன்று பிரித்தானியா சென்றுள்ளார்.
இந்நிலையில், அதிபர் ரணில் விக்ரமசிங்க நாடு திரும்பியதுடன் புதிய அமைச்சரவை பதவியேற்கும் என அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
புதிய அமைச்சரவை அடுத்த மாதம் 20 ஆம் திகதி முதல் 23 ஆம் திகதிக்குள் பதவியேற்கும் எனவும் அவ்வாறு அமைச்சரவை பதவியேற்க முடியாது போனால், அரசாங்கத்தின் இருப்பு பெரும் நெருக்கடிக்கு உள்ளாக கூடும் எனவும் பேசப்படுகிறது.
நாமலுக்கு அமைச்சு பதவி
அதேவேளை புதிய அமைச்சரவையில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு மாத்திரம் அமைச்சு பதவி கிடைக்காது என தெரிவிக்கப்படுகிறது.
எனினும் எதிர்ப்புகளை எதிர்நோக்கி வந்த ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, மகிந்தானந்த அளுத்கமகே, ரோஹித்த அபேகுணவர்தன, பவித்ராதேவி வன்னியாராச்சி, எஸ்.எம்.சந்திரசேன, சரத் வீரசேகர ஆகியோருக்கு அமைச்சு பதவிகள் வழங்கப்பட உள்ளன.
இதேவேளை, ஐக்கிய தேசியக்கட்சியின் வஜிர அபேவர்தனவுக்கு முக்கியமான அமைச்சரவை அந்தஸ்துள்ள பதவி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய அமைச்சரவையின் எண்ணிக்கை 35 க்கும் மேற்பட்டதாக இருக்கலாம் என தகவல்கள் கூறுகின்றன.
