நாட்டில் தபால் நிலையங்கள் மூடப்படும் அபாயம்- அசண்டையீனமாக செயற்படும் அரசாங்கம்!
நாட்டில் தபால் துறைக்கு ஊழியர்கள் பற்றாக்குறை காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அதிகளவான தபால் நிலையங்களை் மூடப்படும் அபாய நிலை காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது கொழும்பு நகர எல்லையில் உள்ள பொரளை தபால் நிலையத்தில் 35 பணியாளர்கள் இருக்க வேண்டிய நிலையில் தற்போது 7 பணியாளர்களே இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
6,000 ஆக இருந்திருக்க வேண்டிய மொத்த தபால் ஊழியர்களின் எண்ணிக்கை இன்று 4,000 ஆகவே உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு தபால் துறையில் ஊழியர்கள் பற்றாக்குறை காணப்படுவதால் ஏராளமான தபால் நிலையங்கள் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. திணைக்களத்தில் தற்போது சுமார் 1,600 நிலைய பொறுப்பதிகாரிகள் மற்றும் பொது தபால் ஊழியர்களுக்கு பற்றாக்குறை நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது.
2018ஆம் ஆண்டு முதல் பணியாளர்களை இணைத்துக் கொள்ள அனுமதி கோரப்பட்ட போதிலும், இதுவரை அரசாங்கத்தின் அனுமதி கிடைக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பற்றாக்குறைக்கு தற்காலிக தீர்வாக ஓய்வுபெற்ற 500 தபால் உத்தியோகத்தர்களை ஒப்பந்த அடிப்படையில் நியமிக்க முன்வந்த போதிலும் அது நடைமுறைப்படுத்தப்படவில்லை என தபால் ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், சில தபால் நிலையங்களில் பணிபுரியும் அதிகாரி ஒருவர் மகப்பேறு விடுப்பில் சென்றால் அலுவலகத்தை மூட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.