வாக்குகளைப்பெறுவதற்காக பெரமுனவுக்கு கோடிகளை அள்ளி வீசிய ரணில் - பகிரங்கப்படுத்தப்பட்ட தகவல்!
நாடாளுமன்றத்தில் நடைபெற்ற புதிய அதிபருக்கான வாக்கெடுப்பில் வெற்றிபெற ரணில் விக்ரமசிங்க, பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கோடிக்கணக்கில் பணம் வழங்கியதாக ஐக்கிய மக்கள் சக்தி பகிரங்கமாகத் தெரிவித்துள்ளது.
அதனடிப்படையில், தலா 10 கோடி ரூபா முதல் 15 கோடி ரூபாவை வழங்கியதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன பகிரங்கமாகத் தெரிவித்துள்ளார்.
பெரமுனவின் முட்டாள்களைப் பயன்படுத்திக்கொள்ளும் ரணில்
ரணில் விக்ரமசிங்க,பொதுஜன பெரமுனவின் முட்டாள்களை நன்கு பயன்படுத்திக்கொள்வார் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இணையத்தள ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
அதிபரைத் தெரிவு செய்வது தொடர்பான விடயத்தில் நாங்கள் கட்சித் தலைவர்களுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தினோம். ஆனால், ரணில் விக்ரமசிங்க தரப்பினர் தனித்தனியாக நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பேரம்பேசப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள்
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பணத்தை வழங்குவது, எரிந்து போன வீட்டுக்கு பதிலாக வீடு, அவற்றுக்கு இழப்பீடு வழங்குவது, கார்களை இறக்குமதி செய்ய அனுமதிப்பத்திரம், இரண்டு ஆண்டு காப்பீடு போன்றவற்றை அவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பேசினர்.
பெருந்தொகையான பணம் பரிமாறப்பட்டது. எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய பொதுஜன பெரமுனவை சேர்ந்த 15 பேரை கொண்ட நாடாளுமன்ற குழுவினர்களும் எங்களிடம் பணத்தை கோரினர்.
ரணிலிடமிருந்து, சஜித் பலவற்றைக் கற்றுக்கொள்ள வேண்டும்
டலஸ் அழகப்பெருமவை நாங்கள் ஆதரிக்கின்றோம், எங்களுக்கு எவ்வளவு பணம் தருவீர்கள் என கேட்டனர். இது பற்றி நான் சஜித்திடம் பேசினேன், ஐந்து சதம் கூட வழங்கக் கூடாது என அவர் சொன்னார்.
அதனை நான் நூற்றுக்கு நூறு வீதம் ஏற்றுக்கொள்கிறேன். ரணில் விக்ரமசிங்கவுக்கு இவர்கள் வாக்களிக்க 10 முதல் 15 கோடி ரூபா வரை பெற்றனர் என்று எனக்கு தகவல் கிடைத்தது.
சஜித் பிரேமதாச, ரணில் விக்ரமசிங்கவிடம் இருந்து இன்னும் பலவற்றை கற்றுக்கொள்ள வேண்டும். சஜித் பிரேமதாச முதிர்ச்சியான அரசியல்வாதியாக மாறி வருகிறார். அவர் மிக நேர்மையானவர் என்பதுடன் அப்பாவி எனவும் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.