இதுவே இறுதி சந்தர்ப்பம் - கைநழுவ விடக்கூடாது - அரசியல் நீரோட்டத்தில் இணைய அழைப்பு!
சிறிலங்கா அரசாங்கத்துடன் ஐக்கிய மக்கள் சக்தி எதிர்காலத்தில் கைகோர்க்கும் என நம்புவதாக சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
மேலும் நாட்டை கட்டியெழுப்ப கிடைத்திருக்கும் இறுதியான சந்தர்ப்பம் இதுவாகும் எனவும் சுதந்திரக்கட்சியின் தேசிய அமைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
அதிபர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் அனுராதபுரத்தில் இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்தி சபை கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
“இன்று எனக்கு மிகவும் மகிழ்ச்சியான நாள். பல முக்கிய அரசியல் கட்சிகளின் உறுப்பினர்கள் இன்று ஒன்றாக இருக்கிறார்கள். 2015 இல் இருந்து இந்த நாளுக்காகத் காத்திருக்கிறோம்.
விதியின் விளையாட்டால் அதிபராக ரணில்

ஆனால் அன்று அதைச் சரியாகச் செய்ய முடியவில்லை. அப்போது சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி ஆகிய இரண்டு பிரதான கட்சிகளும் இணைந்து நாட்டை கட்டியெழுப்பும் ஆலோசனையை முன்வைத்த போதிலும் துரதிஷ்டவசமாக அதனை நாட்டு மக்கள் ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கவில்லை.
ஆனால் விதியின் விளையாட்டால் சுதந்திரக் கட்சியினை தாய்க்கட்சியாகக் கொண்ட பொதுஜன பெரமுன உங்களை அதிபராக நியமித்துள்ளது.
நல்லவைகள் சிறந்த நேரத்தில் நடக்காவிட்டாலும், இன்று ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு, முக்கிய அரசியல் நீரோட்டங்கள் ஒன்றாக இணைந்து, நாட்டை இருந்ததை விட சிறந்த இடத்திற்கு கொண்டு செல்லும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
கிடைத்த இரண்டு சந்தர்ப்பங்களை இழந்தோம்

நாம் வரலாறு பற்றி பேசிப் பயனில்லை. வரலாற்றை மறந்து அனைவரும் ஒன்றிணைந்து இந்த நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டும்.
இப்போது இந்த நாட்டைக் கட்டியெழுப்பவில்லையென்றால், வேறொரு நாள் கிடைக்காது இதற்கு முன்னர் இந்த நாட்டைக் கட்டியெழுப்பக் கிடைத்த இரண்டு சந்தர்ப்பங்களை இழந்துள்ளோம்.
சுனாமி அனர்த்தத்தின் பின்னர் நாட்டை கட்டியெழுப்பி இருக்கலாம். அன்று அனைவரும் கட்சி பேதங்களை மறந்து கைகோர்த்தனர். எனினும் நாம் அந்த சந்தர்ப்பத்தை நழுவவிட்டோம்.
போருக்கு பின்னர் இரண்டாவது சந்தர்ப்பம் கிடைத்தது. எனினும் அதனையும் நாம் நழுவவிட்டோம்.
எதிர்காலத்தில் ஐக்கிய மக்கள் சக்தியும் கைகோர்க்கும்

போராட்டத்தின் மூலம் நாட்டில் மாற்றம் ஏற்படும் என நம்பிய இளைஞர்கள் கூட்டம் இருந்தது. அரசியல் மாற்றம் மட்டுமின்றி அனைத்து துறைகளிலும் மாற்றத்தை எதிர்பார்த்தனர்.
அந்த மாற்றத்தை நாடே கோரியது, நாங்கள் அரசியல் ரீதியாக பிளவுபட்டிருந்ததால் இதை முன்னரே செய்ய முடியவில்லை.
நீங்கள் தலைமைத்துவத்தை எடுக்கும் போது பொதுஜன பெரமுன, ஐக்கிய தேசியக் கட்சி, சுதந்திரக் கட்சியின் செயற்பாட்டாளர்கள் இங்கு ஒன்றாக இருக்கிறார்கள்.
எதிர்காலத்தில் ஐக்கிய மக்கள் சக்தியும் உங்களுடன் கைகோர்க்கும் என்று நம்புகிறோம். நாம் ஒன்றுபட்டால் இதைச் செய்யலாம்” எனவும் தெரிவித்துள்ளார்.