நாடு வங்குரோத்து அடைந்து விட்டது என அறிவிக்க நிதியமைச்சர் அனுமதி வழங்கினாரா!
இலங்கை வங்குரோத்து அடைந்து விட்டது என்று யாருடைய அனுமதியுடன் அறிவிக்கப்பட்டது என்பதை உடனடியாக வெளியிட வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
நாடு வங்குரோத்து அடைந்து விட்டதா என்பதை ஆராய அமைச்சரவை அனுமதி வழங்கியதா? நிதியமைச்சும், நிதியமைச்சரும் அதற்கான அனுமதியை வழங்கினரா? நாடாளுமன்றம் அனுமதி வழங்கியதா? போன்ற விடயங்களை ஆராய்ந்து நாட்டுக்கு விடயங்களை கூற வேண்டியது நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் 225 பேர் கடமை.
கவலைக்கிடமான நிலையில் நாடு
தற்போது இலங்கை உலகத்திற்கு முன்னால் மிகவும் கவலைக்குரிய நிலைமைக்கு உள்ளாகியுள்ளது. கடனை திரும்ப செலுத்தாததே இந்த நிலைமைக்கு காரணம் எனவும் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலைமை காரணமாக இலங்கை அரசு வெளிநாட்டு நிறுவனங்களிடம் பெற்ற கடன்கள் மற்றும் சர்வதேச இறையாண்மை பிணை முறி வெளியிடுகள் மூலம் பெற்ற கடன்களுக்கு வட்டி மற்றும் அசலை செலுத்த முடியாத நிலைமை உருவாகியுள்ளது.
இதன் காரணமாக கடன் தரப்படுத்தல் நிறுவனங்கள் இலங்கையை கீழ் நோக்கி தரப்படுத்தியுள்ளன.
பெற்ற கடன்களை திரும்ப செலுத்த முடியாத நிலைமை காரணமாக இலங்கை வங்குரோத்து அடைந்து விட்டதாக அண்மையில் தகவல்கள் வெளியாகி இருந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது.
