இலங்கை தமிழர்கள் விவகாரம் - பிரித்தானிய பிரதம மந்திரி வேட்பாளரின் சாதகமான பதில்
தான் பிரதமராக தெரிவு செய்யப்பட்டால் இலங்கையில் மனித உரிமை, நல்லிணக்கம், நீதி மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியவற்றை நிலைநாட்டுவதில் உறுதியாக உள்ளதாக பிரித்தானிய பிரதம மந்திரி வேட்பாளர் லிஸ் ட்ரஸ் கூறியுள்ளார்.
பிரித்தானிய தமிழ் கன்சர்வேட்டிவ் அமைப்பினரால் பிரதம மந்திரி வேட்பாளரான லிஸ் ட்ரஸ் அம்மையாருடன் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இணையவழிக் கூட்டம் இன்று இடம்பெற்றது.
இக் கூட்டத்தில் ரெலோவின் ஊடகப்பேச்சாளர் கு. சுரேந்திரன் பங்கேற்றிருந்தார்.
தமிழர்களுக்கான ஆதரவு நிலை
லிஸ் ட்ரஸ் அம்மையாரிடம் இலங்கை தமிழர்கள் நீண்ட காலமாக ஐ.நாவில் தங்களுக்கான நீதியைக் கோரி போராடிக் கொண்டிருக்கின்றார்கள். அதற்கு தங்களுடைய ஆதரவு நிலை எப்படி இருக்கும் என்று கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு "நான் பிரதமராக தெரிவு செய்யப்பட்டால் இலங்கையில் மனித உரிமை, நல்லிணக்கம், நீதி மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியவற்றை நிலைநாட்டுவதில் உறுதியாக இருக்கிறேன்" என்று டிரஸ் கூறினார்.
மேலும் வெளிவிவகார அலுவலர்களுக்கான செயலாளரைத் தெரிவு செய்கின்ற பொழுது இந்த விடயத்தில் நான் அதிக கவனம் செலுத்துவேன் என்றும் அவர் உறுதியளித்தார்.
அண்மையில் அனைத்து தமிழ்த் தரப்பினரும் ஒன்றிணைந்து சர்வதேச நீதிமன்றத்திற்கு இலங்கையை பாரப்படுத்த ஐ.நா பாதுகாப்புச் சபையை தூண்டும் பிரேரணையை நிறைவேற்றக் கோரி பிரதான அங்கத்துவ நாடுகளுக்கு வரைபு ஒன்று அனுப்பி வைத்துள்ளனர்.
அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த உறுதிமொழி
மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கான பிரேரணையை நிறைவேற்றுவதில் பிரதான நாடாக பிரித்தானியா தலைமை வகிக்கிறது.
பிரித்தானியாவின் எதிர்கால பிரதமராக லிஸ் ட்ரஸ் தெரிவு செய்யப்படுவதற்கு அதிக வாய்ப்புகள் காணப் படுகின்றன.
இந்த நிலையில் குறித்த சந்திப்பும் லிஸ் ட்ரஸ் அம்மையாரின் உறுதிமொழியும் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுவதாக அரசியல் அவதானிகள் கூறியுள்ளனர்.