ஆளும் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் மூவரை அமைச்சு பதவியிலிருந்து நீக்குமாறு நீதிமன்றில் கோரிக்கை!
யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தின் பங்குகளை அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்கியுள்ளமைக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
நேற்றைய தினம், பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, நீதியரசர்களான புவனேக அளுவிஹாரே, பிரியந்த ஜயவர்தன, விஜித் மலல்கொட மற்றும் எல்.ரி.பி. தெஹிதெனிய ஆகியோரடங்கிய ஐவர்கொண்ட நீதியரசர் குழாம் முன்னிலையில், இந்த மனு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டது.
இந்நிலையில் இந்த உடன்படிக்கைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு தொடர்பான மேலதிக விசாரணை இன்று காலை ஆரம்பமானது.
இந்நிலையில், அமைச்சர்கள் வாசுதேவ நாணயக்கார, விமல் வீரவங்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என அரச தலைவர் சட்டத்தரணி சாலிய பீரிஸ் உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
வழக்கில் வாதங்களை முன்வைத்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். சட்டத்தரணி சாலிய பீரிஸ், கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை மற்றும் எல்லே குணவங்ச தேரர் ஆகியோர் சார்பில் முன்னிலையானார்.
அமைச்சரவையின் கூட்டுப் பொறுப்பை மீறியுள்ள இந்த அமைச்சர்கள் மூன்று பேரையும் அமைச்சரவையின் பிரதானி நீக்கி இருக்க வேண்டும் என்ற போதிலும் அது நடக்கவில்லை எனவும் சட்டத்தரணி நீதிமன்றத்தில் குறிப்பிட்டுள்ளார்.