தேர்தலை நடத்தாமல் இருப்பது தவறான விடயம் - சுமந்திரன்
தேர்தல் முறையில் சீர்சிருத்தம் செய்வது நல்ல விடயம். ஆனால் சீர்சிருத்தம் இன்னும் செய்யவில்லை என்ற காரணத்திற்காக தேர்தலை நடத்தாமல் இருப்பது தவறான விடயம் என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
தமிழரசுக் கட்சியின் மத்தியசெயற்குழுக் கூட்டம் வவுனியாவில் நேற்று இடம்பெற்றது. அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
யாப்பில் செய்யப்படவேண்டிய திருத்தங்கள்
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், “தமிழரசுக் கட்சியின் யாப்பில் செய்யப்படவேண்டிய திருத்தங்கள் தொடர்பாக பேசியிருக்கிறோம். அது தொடர்பில் நீண்டகாலமாக பல்வேறு விடயங்கள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன. அவற்றை உள்ளடக்குவதுடன், புதிய திருத்தங்களை சேர்ப்பதற்குமான நடவடிக்கைகளை எடுப்பதற்கு புதிய குழு ஒன்று நியமிக்கப்பட்டிருந்தது.
அது தொடர்பான விடயங்கள் இன்று சபையிலே சமர்ப்பிக்கப்பட்டிருக்கின்றன. அவற்றை ஆராய்ந்துள்ளோம். முழு ஆவணத்தையும் பார்ப்பதற்கு இன்று நேரம் போதவில்லை எனவே பிறிதொரு தினத்தில் அது தொடர்பாக ஆராய்வோம்.
அதிபருடனான எமது சந்திப்பில் அதிகாரப் பகிர்வு தொடர்பான விடயங்களே பேசப்படும் என சொல்லப்பட்டிருக்கின்றது. இது தொடர்பாக ஏற்கனவே நான்கு தடவைகள் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளோம். செய்யப்படவேண்டிய விடயங்கள் தொடர்பாக எழுத்துவடிவிலும் அவருக்கு தெளிவுபடுத்தியிருக்கின்றோம்.
மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படவேண்டும். வெறுமனே சடங்களை திருத்தி விட்டு மாகாண சபைகள் இயங்காமல் விட்டால் அதில் அர்த்தமில்லை. ஒரு அரசாங்கம் செய்யவேண்டியவிடயத்தை ஒரு கட்சி செய்துள்ளது. தனிநபர் சட்டமூலம் ஒன்றை அறிமுகப்படுத்தியிருக்கின்றேன். அதனை சிங்களத் தரப்பைச் சேர்ந்த இருவர் சவாலுக்குட்படுத்தியதுடன் உச்சநீதிமன்றத்தில் அது தொடர்பில் ஒரு விவாதம் இடம்பெற்றது.
அதனடிப்படையில் உச்சநீதிமன்றம் இது தொடர்பான தீர்ப்பினை நாடாளுமன்றுக்கும் அதிபருக்கும் அறிவிக்கும். இந்தச் சட்டமூலத்தை நடமுறைப்படுத்தினால் மாகாணசபை தேர்தலை உடனடியாக நடத்தமுடியும். அப்படி நடாத்தும்போது பழைய தேர்தல் முறையிலேயே நடத்தலாம்.
மகிந்த குறித்த வதந்தி
தேர்தல் விரைவில் நடத்தப்படவேண்டும். மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமையான வாக்குரிமையை அரசாங்கம் மறுதலிக்கக் கூடாது.
இதேவேளை, மகிந்தவை பிரதமராக நியமிக்கப் போவதாக ஒரு வதந்தி ஒன்று பரவியது. அப்படி நடந்தால் கடந்த வருடம் போராட்டம் நடத்தியவர்கள் நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தக் கூடும் எனும் பயத்தினால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டதாகவே நாம் அறிகின்றோம்.
தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாண தொகுதிக்கிளை கூட்டத்தில் எந்தக் கைகலப்பும் இடம்பெறவில்லை. கூட்டம் முடிந்த பின்னர் இடம்பெற்ற விடயங்கள் தொடர்பாக எம்மிடம் கேட்கமுடியாது” -என்றார்.
