கனடாவில் இலங்கை வைத்தியர் பாரிய குற்றச்சாட்டுகளில் கைது!
கனடாவின் டொராண்டோவில் உள்ள சிக் கிட்ஸ் வைத்தியசாலையில் (SickKids) பணிபுரியும் இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிறுவர்கள் பாலியல் சுரண்டல் தொடர்பான பொருட்களை வைத்திருந்ததாகவும், அவற்றை உபயோகிக்க முற்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டு அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
டொராண்டோவைச் சேர்ந்த 44 வயதான வைத்தியர் திலான் திசாநாயக்க என்பவரே இவ்வாறு குற்றஞ்சாட்டப்பட்டவர் என காவல்துறை தெரிவித்துள்ளது.
ஆதாரங்கள்
மின்னணு சாதனம் ஒன்றைப் பயன்படுத்தி சிறுவர் பாலியல் சுரண்டல் பொருட்களை அணுகி பதிவிறக்கம் செய்ததாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில், அந்நாட்டு காவல்துறையின் இணையவழி சிறுவர்கள் சுரண்டல் தடுப்புப் பிரிவு இந்த விசாரணையைத் தொடங்கியுள்ளது.

இதன் தொடர்ச்சியாக, 2026 பெப்ரவரி மாதத்தில் வைத்தியசாலையிலும் அவரது தனிப்பட்ட இல்லத்திலும் சோதனைகளை மேற்கொண்ட காவல்துறையினர், அவரது அலுவலக கணினி உட்பட பல மின்னணு சாதனங்களைக் கைப்பற்றியுள்ளனர்.
இருப்பினும், கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் அவர் ஆற்றிய மருத்துவப் பணியுடன் தொடர்புடையவை என்பதற்கான எந்த ஆதாரமும் இதுவரை கிடைக்கவில்லை என்று புலனாய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
நிரூபிக்கப்படாத குற்றச்சாட்டுகள்
இந்த நிலையில், திசாநாயக்க செவ்வாய்க்கிழமை டொராண்டோ நீதிமன்றத்தில் முற்படுத்தபடவிருந்த நிலையில், அவர் மீதான குற்றச்சாட்டுகள் இன்னும் நீதிமன்றத்தில் சட்டப்பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இதன்படி, இந்தச் செய்தி குறித்து ஆழ்ந்த வருத்தமும் அதிர்ச்சியும் தெரிவித்துள்ள சிக் கிட்ஸ் வைத்தியசாலை நிர்வாகம், காவல்துறையினரால் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளைக் கண்டித்துள்ளது.
இதேவேளை, நோயாளிகள், அவர்களின் குடும்பத்தினர் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்பே தங்களின் மிக உயர்ந்த முன்னுரிமை எனக் குறிப்பிட்டுள்ள வைத்தியசாலை, இந்த விசாரணை குறித்துத் தெரிந்தவுடனேயே மருத்துவர் திசாநாயக்கவை உடனடியாகப் பணியிலிருந்து இடைநீக்கம் செய்து விடுப்பில் அனுப்பியதாகத் தெரிவித்துள்ளது.
மேலும், மருத்துவர் திசாநாயக்கவிடம் சிகிச்சை பெற்ற நோயாளிகளின் குடும்பத்தினர் ஏதேனும் சந்தேகங்கள் அல்லது கவலைகள் இருந்தால் வைத்தியசாலையின் நோயாளி தொடர்புத் துறையை அணுகலாம் என்றும், இச்சம்பவம் தொடர்பாகத் தகவல் அறிந்த எவரும் காவல்துறையைத் தொடர்பு கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
கொடிய சட்டமான PTA கொண்டுவரப்பட்டு இன்றுடன் 47 ஆண்டுகள்…
4 நாட்கள் முன்