ஹயேஸ்வான் நெத்தலிகளுக்கு சூடு! குற்றச்சுறாக்களுக்கு STF பாதுகாப்பு
கோழியும் அவர்களுடையது அவர்களின் வீட்டில் காயப்போட்ட புளுங்கலை உண்ணும் கோழியும் அவர்களுடையது என்ற வகையில் நேற்று யாழ்ப்பாணம் அல்லைப்பட்டி பகுதியில் சிறிலங்கா காவற்துறை மேற்கொண்ட துப்பாக்கிச்சூடு குறித்த அறிக்கையிடல்கள் அதேதரப்பில் இருந்து வருகின்றன.
பலியானவர் 17 வயது பதின்ம வயதுக்கார சிறுவன் அல்ல அவர் 19 வயதுடைய இளைஞர் என்பது முதல் கோழியும் புளுங்கலும் அவர்களுடையது என்ற பாணியில் காவல்துறை பிரஸ் வந்துள்ளது.
இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்ட சில விடயங்கள் குறிப்பாக பலியானவர் ஐஸ் மற்றும் ஹெரோயின் பயன்படுத்தியமை உடற்கூற்று பரிசோதனைகளின்போது தெரியவந்ததாக குறிப்பிடப்படுவது மற்றும் வாகனத்தில் வாள் இருந்தது கஞ்சா இருந்தது, கால்நடைகளை திருடுவதற்குரிய ஆதாரங்கள் இருந்தன என சொல்லப்படுவது உற்றுநோக்கப்படுகிறது.
ஒருவேளை காவற்துறை கூறும் விடயங்களுக்கு ஆமேன் அவ்வாறாகவே இருக்கட்டுமே. ஒருவர் சந்தேக நபராக இருந்தாலும் அவரது மூளையை துளைத்து துப்பாக்கிரவையை பாய்ச்சும் அளவுக்கு பலப்பிரயோகம் தேவையா? என்பது தான் இங்குவிடயமே.
இதற்கும் அப்பால் தமிழ்ப்பகுதிகள் என்றால் காவல்துறை பொசுக்கென இவ்வாறு துப்பாக்கி லகானை அவ்வப்போது அழுத்தியும் விடுகிறது.
ஒரு பேச்சுக்காக இந்த வாகனம் கால்நடை திருட்டுடன் சம்பந்தப்பட்ட வாகனமாக இருக்கட்டுமே? அப்படியானால் இவ்வாறான சிறிய நெத்தலிகளுக்கு துப்பாக்கி லகானை அழுத்திவிழும் காவற்துறைக்கு மக்களின் பணத்தை மில்லியன்களில் கொள்ளையிட்டவர்கள், பாதாள உலகம் மற்றும் போதைபொருள் தொடர்பாளர்கள், கூலிக்குழுக்களை அமர்த்தி அரசியல் எதிராளிகளை போட்டுத்தள்ளிய அரசியல் கொலைகாரர்கள், தமிழர்கள் என்ற காரணத்தால் வகைதொகையின்றி மக்களை கொன்ற கொலைகாரர்களும் இதே நாட்டில் இன்னும் சுதந்திரமாகவும் பாதுகாப்புக்கு அதிகாரிகளை கொண்டிருக்கும் இருக்கும் யதார்த்தத்தையும் தொட்டுவருகிறது செய்திவீச்சு..
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |