கணவருடன் சென்ற பல்கலை மாணவிக்கு ஏற்பட்ட அவலம்!
அம்பாறை - நிந்தவூர் காவல்துறை பிரிவிற்குட்பட்ட கல்முனை அக்கரைப்பற்று பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் பல்கலைக்கழக மாணவி உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் நேற்று (31) இடம்பெற்றுள்ளது.
பல்கலைக்கழக மாணவி தனது கணவருடன் உந்துருளியில் பயணித்துக் கொண்டிருந் போது வாகனமொன்றுடன் மோதுண்டு சம்பவ இடத்தில் மரணமடைந்துள்ளார்.
காயமடைந்த குறித்த மாணவியின் கணவர் தற்போது நிந்தவூர் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் மாணவி
இவ்விபத்தில் உயிரிழந்தவர் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் 2 ஆம் வருட மாணவியான காத்தான்குடி 5ஆம் பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய அக்பர் அலி பாத்திமா அஸ்பா என்பவராவார்.
மேலும், சம்மாந்துறை நீதிமன்ற நீதிவானின் கட்டளையின் பிரகாரம் பிரதேச மரண விசாரணை அதிகாரி அப்துல் ஹமீட் அல் - ஜவாஹிர் சம்பவ இடத்திற்கு சென்று மரண விசாரணையை மேற்கொண்டார்.
மரண விசாரணை
பின்னர் நிந்தவூர் ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்த பல்கலைக்கழக மாணவியின் சடலத்தை சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி பிரேத பரிசோதனையை மேற்கொள்ளுமாறு சட்ட வைத்திய அதிகாரிக்கு பிரதேச மரண விசாரணை அதிகாரி அப்துல் ஹமீட் அல் - ஜவாஹிர் கட்டளையிட்டார்.
மேலும், குறித்த விபத்தில் பல்கலைக்கழக மாணவியின் தலைப்பகுதியில் ஏற்பட்ட பாரிய காயம் காரணமாக அதிகளவு இரத்தப்போக்கு ஏற்பட்டிருந்த நிலையில் இம்மரணம் சம்பவித்துள்ளது என பிரேத பரிசோதனையில் குறிப்பிடப்பட்டு பின்னர் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

