வெளிநாட்டில் உயிரிழந்த இலங்கை பெண் - எடுக்கப்பட்ட உடனடி நடவடிக்கை
சிங்கப்பூரில் எட்டாவது மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த இலங்கை வீட்டுப் பணிப்பெண்ணின் மரணம் தொடர்பில் அவசர விசாரணைகளை மேற்கொள்ளுமாறு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் (SLBFE) பணிப்புரை விடுத்துள்ளதாக அதன் தலைவர் ஏ.ஏ.எம். ஹில்மி அஸீஸ் தெரிவித்தார்.
“இந்த துயரச் சம்பவம் குறித்து கேள்விப்பட்டதும், நடிகா தில்ஹானி பெர்னாண்டோ என்ற பெண்ணின் உடலை இலங்கைக்கு கொண்டு வர சிங்கப்பூரில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்துடன் இணைந்து தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.மே 20 ஆம் திகதி உடல் கொண்டு வரப்படும்," என்று அவர் மேலும் கூறினார்.
வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிந்து
குறித்த பணிப்பெண் கடந்த ஆண்டு நவம்பர் 18 ஆம் திகதி பணியகத்தில் பதிவு செய்து, அதன் பின்னர் வெளிநாட்டிற்கு சென்றுள்ளார்.ஆனால் பணியகத்திலோ அல்லது இலங்கை தூதரகத்திலோ புகார் எதுவும் செய்யப்படவில்லை.
வேலை செய்யும் இடத்தில் பிரச்சனை
அவர் வெளியூர் சென்ற பின்னர் வேலை செய்யும் இடத்தில் பிரச்சனைகளை எதிர்கொண்டதாக தெரியவருகிறது. எனினும், தெரிவிக்கப்படும் தகவல் தொடர்பில் முழுமையான விசாரணை நடத்தப்பட்டு, இது தொடர்பில் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பணியகம் மேலும் தெரிவித்துள்ளது.
உயிரிழந்த பெண் தாயாருக்கு தெரிவித்த தகவல்
இதேவேளை சிங்கப்பூரில் உயிரிழந்த தனது மகள், அவருக்கு நடந்த துன்பங்கள் அனைத்தையும் தன்னிடம் தெரிவித்ததாக உயிரிழந்த பெண்ணின் தாயார் குறி்ப்பிட்டுள்ளார். தனக்கு ஞாயிற்றுக்கிழமை விடுமுறை அளிக்கப்படவில்லை என்றும், அந்த வீட்டில் உள்ளவர்கள் தன்னை மனிதாபிமானமற்ற முறையில் நடத்தியதாகவும், தன்னை ஒரு அறையில் அடைத்து வைத்ததாகவும் குறித்த பெண் தனது தாயாரிடம் தெரிவித்துள்ளார்.
இதுபோன்ற வன்முறை கும்பலை தான் பார்த்ததில்லை என தனது மகள் தன்னிடம் தெரிவித்ததாகவும் உயிரிழந்த பெண்ணின் தாயார் தெரிவித்தார்.
மகளின் மரணத்தில் சந்தேகம்
தனது மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், மகள் பணிபுரிந்த வீட்டின் பாதுகாப்பு கமராக்களை அவதானித்து தனது பெண்ணுக்கு நியாயம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவரது தாயார் கோரிக்கை விடுத்துள்ளார்.
சிங்கப்பூரில் உயிரிழந்த இலங்கை வீட்டுப் பணிப்பெண்ணின் சடலம் இன்று (20) இலங்கைக்கு கொண்டுவரப்பட்டது. தங்கொடுவ பிரதேசத்தைச் சேர்ந்த 41 வயதுடைய திருமணமான பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
