சரவகட்சி அரசில் இணைய நிபந்தனை விதித்த சுதந்திரக் கட்சி..! வெளிப்படுத்தினார் மைத்திரி
சர்வக்கட்சி அரசாங்கத்தில் சிறிலங்கா சுதந்திரக் கட்சி இணைய வேண்டுமானால், 6 மாதத்திற்குள் ஒரு தேர்தலை நடத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளதாக முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
அத்துடன், சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பது தொடர்பாக இன்று அதிபர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையில் கலந்துரையாடல் ஓன்று இடம்பெறவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்துரைக்கும் போதே அவர் இந்த விடயத்தினை குறிப்பிட்டார்.
அரசாங்கத்தின் நிலைப்பாடு இன்னமும் வெளிப்படுத்தப்படவில்லை
தொடர்ந்து கருத்துரைத்த அவர், " சர்வக்கட்சி அரசாங்கம் தொடர்பாக அரசாங்கத்தின் நிலைப்பாடு இன்னமும் ஸ்தீரமாக வெளிப்படுத்தப்படவில்லை.
சர்வக்கட்சி அரசாங்கத்தில் நாம் இணைய வேண்டுமானால், 6 மாதத்திற்குள் ஒரு தேர்தலை நடத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளோம். அதற்குள் எரிபொருள் உள்ளிட்ட பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளோம்.
போராட்டக்காரர்களை அடக்க இந்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கு சர்வதேச நாடுகளும் கண்டனங்களை வெளியிட்டுள்ளன.
அரசாங்கத்தின் இவ்வாறான செயற்பாடுகள், போராட்டங்களை இன்னமும் தீவிரப்படுத்துமே ஒழிய அதனை ஒருபோதும் கட்டுப்படுத்தாது. நாடும் இதனால் மேலும் பாதிக்கப்படும்.
சர்வகட்சி அரசாங்கமே தீர்வு
உலக நாடுகளில் இவ்வாறான பொருளாதாரப் பிரச்சினைகள் வந்தபோதும், சர்வக்கட்சி அரசாங்கங்கள் அமைந்த வரலாறுகள் உள்ளன. இந்தநிலையில், இன்றைய பேச்சுவார்த்தையின்போதும் நாம் எமது நிலைப்பாட்டை அதிபரிடம் தெரியப்படுத்தவுள்ளோம்.
எமது கோரிக்கைகள் தொடர்பாக அதிபர் எவ்வாறான நிலைப்பாட்டை வெளிப்படுத்துகிறாரோ, அதற்கு இணங்க தான் எமது அடுத்தக்கட்ட நகர்வுகளும் இருக்கும்.
நாட்டில் இப்போதிருக்கும் இந்தப் பிரச்சினைகள் அனைத்துக்கும் சர்வக்கட்சி அரசாங்கத்தினாலேயே தீர்வினை காண முடியும் என்பதை நாம் உறுதியாக நம்புகிறோம்.- என்றார்.