அடுத்த வாரமளவில் இலங்கையில் உருவாகவுள்ள மருத்துவ சுனாமி- விடுக்கப்பட்டுள்ள கடுமையான எச்சரிக்கை!
இலங்கையில் மோசமான மருத்துவ சுனாமி ஒன்று அடுத்த வாரமளவில் உருவாகலாம் என மருத்துத்துறை நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
டெல்டா திரிபு வைரஸ் தொற்றானது கட்டுக்கடங்காத வகையில் பரவிச் செல்வதால் இந்த நிலை உருவாகும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் மேல் மாகாணத்தில் உள்ள வைத்தியசாலைகள் அனைத்தும் கொரோனா நோயாளிகளினால் நிரம்பியுள்ள நிலையில், அனேகமானவர்கள் சுவாச நோயுடன் தொடர்புடையவர்கள் என கொரோனா நோய் எதிர்ப்பு திட்டத்தில் முன்னணியிலிருந்து பணியாற்றும் சிரேஷ்ட வைத்தியர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதனால் நோயாளர்களில் மூன்றில் இரண்டு பேருக்கு பிராணவ வாயு அவசியப்படுவதாகவும் மருத்துவ நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அனைத்து நோயாளர் படுக்கைகளும் கொரோனா நோயாளர்களுக்கு சிகிச்சை வழங்கும் வகையில் ஒதுக்கப்பட்டுள்ளன.
இதனால் நோயாளர் படுக்கைகளுக்குத் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகியுள்ளதாகவும் வைத்திய நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும் நோயாளர்களுக்கான பிராணவாயு தட்டுபாடும் ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
எதிர்காலத்தில் அதிக கொரோனா நோயாளர்கள் வைத்தியசாலைகளுக்கு வரக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளமையினால் அவர்களுக்கான பிராணவாயு வழங்குவதில் சிரமங்கள் ஏற்படலாம் என வைத்தியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலை தொடருமாக இருந்தால் எதிர்வரும் மாதமளவில் டெல்டா திரிபு வைரஸ் காரணமாக இலங்கையின் மருத்துவத்துறை மிகவும் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாகவும் வைத்தியர்கள் குறிப்பிட்டுள்ளனர்.