அனைத்து விடயங்களிலும் அரசியல் இலாபம் தேடும் எதிர்க்கட்சியினர்! ஜோன்ஸ்டன் சாடல்
கொவிட்-19 வைரஸ் தாக்கத்தை இல்லாதொழிக்க அரசாங்கம் முன்னெடுத்துள்ள நடவடிக்கைகளுக்கு அனைத்து அரசியல் கட்சிகளும் குறுகிய அரசியல் நோக்கங்களை விடுத்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
நாட்டை தொடர்ந்தும் மூடி வைக்க முடியாது. சுகாதார அறிவுறுத்தல்களுக்கு அமைய அனைத்து சவால்களையும் வெற்றிகொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என ஆளும் கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
மேலும் கொவிட்-19 வைரஸ் தாக்கத்தில் இருந்து நாட்டையும், நாட்டு மக்களையும் பாதுகாக்க பிற நாடுகளில் அரசாங்கமும், எதிர்க்கட்சியும் ஒன்றிணைந்து செயற்படுகின்றன. இவ்வாறான தன்மை எமது நாட்டில் கிடையாது எனவும் அனைத்து விடயங்களிலும் அரசியல் இலாபம் தேடும் எதிர்க்கட்சியினரே உள்ளார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
ஜனாதிபதி மற்றும் பிரதமரின் ஆலோசனைக்கு அமைய கொவிட்-19 தடுப்பூசி செலுத்தும் பணிகள் முப்படையினர், பொலிஸ் மற்றும் சுகாதார தரப்பினர் ஆகியோரது ஒத்துழைப்புடன் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுகின்றன.
நாட்டு மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகளை எதிர்வரும் மாதத்திற்குள் வெற்றிகரமாக நிறைவு செய்வோம் எனவும் தெரிவித்தார். அத்துடன் ஜப்பானில் இருந்து அஸ்ராசெனகா தடுப்பூசி கிடைக்கப் பெறாது என்று எதிர்க்கட்சியினர் குற்றஞ்சாட்டினார்கள்.
ஆனால் தற்போது 7 இலட்சம் அஸ்ராசெனகா தடுப்பூசிகள் இரண்டாம் கட்ட தடுப்பூசிகளுக்காக கிடைக்கப் பெற்றுள்ளன. தடுப்பூசி வழங்கலில் எவ்வித நெருக்கடி நிலையும் ஏற்படாது எனவும் தெரிவித்தார்.