புதிய விதிகளை அறிவித்த ரணில்! பிறப்பிக்கப்பட்டுள்ள புதிய கட்டளைகள்
அத்தியாவசிய காரணிகள் தவிர்த்து அமைச்சர்கள் எவரும் நாடாளுமன்ற அமர்வுகளை தவிர்க்கக் கூடாது என்று அதிபர் விக்ரமசிங்க அனைத்து அமைச்சர்களுக்கும் கட்டளையிட்டுள்ளார்.
அதிபராக பதவியேற்றதன் பின்னர் இடம்பெற்ற முதலாவது அமைச்சரவை கூட்டத்திலேயே அவர் இந்த விதிகளை அறிவித்துள்ளார்.
வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு இன்று செவ்வாய்கிழமை (26) இடம்பெற்றது. இதன் போது, அதிபரின் இந்த ஆலோசனை தொடர்பில் அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெளிவுபடுத்தினார்.
அதிபரின் அறிவிப்பு
எதிர்க்கட்சிகள் மற்றும் பொது மக்களின் கேள்விகளுக்கு பதிலளிப்பதற்காக நாடாளுமன்ற அமர்வுகள் இடம்பெறும் அனைத்து நாட்களிலும் சகல அமைச்சர்களும் அவற்றில் கலந்து கொள்ள வேண்டும் என்று அதிபர் ரணில் விக்ரமசிங்க ஆலோசனை வழங்கினார்.
அதே போன்று அமைச்சர்களிடத்தில் சபையில் எழுப்பப்படும் கேள்விகளுக்கு சபை முதல்வர் பதிலளிக்காமல் , அவ் விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர்களே பதிலளிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
எனவே எதிர்வரும் காலங்களில் நாடாளுமன்றத்தினுள் எழுப்பப்படும் கேள்விகளுக்கு குறித்த காலப்பகுதிக்குள் நிலையியற் கட்டளைகளின் பிரகாரம் அந்தந்த அமைச்சர்களால் பதிலளிக்கப்படும்.
அதற்கமைவாக உயர் ஒழுக்கத்துடன் நாடாளுமன்ற அமர்வுகளை முன்னெடுத்துச் செல்வதற்கு ஆளுந்தரப்பினர் முழுமையான ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் அதிபர் கேட்டுக் கொண்டார் என்று அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
