மீண்டும் இலங்கை தமிழர்கள் அகதிகளாக இந்தியாவில் தஞ்சம்
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக மேலும் 10 இலங்கை தமிழர்கள் இந்தியாவை சென்றடைந்துள்ளனர்.
இன்று (23) காலை இவர்கள் தனுஷ்கோடி முகுந்தராயர் சத்திரம் பகுதியை சென்றடைந்துள்ளனர்.
பொருளாதார நெருக்கடியால் கடந்த மார்ச் முதல் இலங்கையில் இருந்து 198 இலங்கை தமிழர்கள் தனுஷ்கோடிக்கு அகதிகளாக சென்றடைந்துள்ளனர்.
இவர்கள்குறித்து தகவலறிந்த ராமேஸ்வரம் மரைன் காவல்துறையினர் இலங்கை தமிழர்களை மீட்டு மண்டபம் மரைன் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காவல்துறை விசாரணை
காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணை மூலம் “வவுனியா மாவட்டம் கணேசபுரத்தை சேர்ந்த உதயசூரியன் அவரது மனைவி பரிமளம் மற்றும் அவரது நான்கு குழந்தைகள் மற்றும் வவுனியா மாவட்டம் புவரசம் குளம் பகுதியை சேர்ந்த புவனேஸ்வரி மற்றும் அவரது மூன்று குழந்தைகள்” என இரண்டு குடும்பங்களும் மன்னாரில் இருந்து நேற்று (22) இரவு படகில் புறப்பட்டு தனுஷ்கோடி அருகே உள்ள முகுந்தராயர் சத்திரம் பகுதியை இன்று (23) காலை சென்றடைந்ததாக தெரியவந்துள்ளது.
மேலும் விசாரணையில் இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வால் குழந்தைகளை வைத்துக் கொண்டு இலங்கையில் வாழ வழி இல்லாததால் தமிழகத்திற்கு அகதிகளாக வந்ததாக தெரிவித்தனர்.
பாதுகாப்பு வட்டார அதிகாரிகளின் விசாரணைக்கு பிறகு 10 பேரும் மண்டபம் அகதிகள் முகாமில் ஒப்படைக்கப்பட உள்ளனர்.
பொருளாதார நெருக்கடி காரணமாக தமிழகத்திற்கு இலங்கையிலிருந்து சென்ற அகதிகள் எண்ணிக்கை 208 ஆக உயர்ந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
நல்லூர் கந்தசுவாமி கோவில் 10ஆம் நாள் திருவிழா
