காணிக்குள் செல்லவே தடை! உரிமையாளரையும் அதிகாரிகளையும் திருப்பி அனுப்பிய இராணுவம்
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மருதங்கேணியில் இராணுவ தேவைக்காக காணி சுவீகரிப்பு நடவடிக்கை ஒன்று இன்று இடம் பெறவிருந்த நிலையில் காணி உரிமையாளர் மற்றும் அரசியல், சமூக செயற்பாட்டாளர்கள் பொதுமக்கள் எதிர்ப்பால் இடைநிறுத்தப்பட்டுள்ளது.
இன்று காலை காணி அளவீடு செய்வதற்காக காணி உரிமையாளர் மற்றும் அயல் காணி உரிமையாளர்களை சமூகமளிக்குமாறு பிரதேச செயலகம் அழைப்பு விடுத்திருந்தது.
இந்நிலையில் காணி உரிமையாளர், அயல் காணி உரிமையாளர்கள் என பலரும் வருகை தந்திருந்தனர்.
அங்கே முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன், காணி உரிமைக்கான மக்கள் இயக்கத்தின் தலைவர் இரத்தினசிங்கம் முரளிதரன், பருத்தித் துறை பிரதேச சபை தவிசாளர் உதயகுமார் யுகதீஷ், உள்ளிட்ட அனைவரும் இணைந்து காணி உரிமையாளரை இராணுவ தேவைக்காக காணியை வழங்க வேண்டாம் என்றும், அயல் காணிகாரர் உட்பட கிராமத்தைச் சேர்ந்தவர்கள், பிரதேசத்தை சேர்ந்தவர்கள் தங்களுடைய காணியை இராணுவ முகாமோடு சேர்த்து கொள்வனவு செய்வதற்கு தயாராக இருக்கிறார்கள் எனவும், எனவே இராணுவத்திற்கு வழங்க வேண்டாம் என்று கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்நிலையில் காணி உரிமையாளர் நீண்ட நேரமாக காணியை இராணுவத்திற்கு விற்பனை செய்வதற்கான முயற்சியிலிருந்தார்.
ஆனாலும் இறுதி நேரத்தில் தனது 30 ஏக்கருக்கும் மேற்பட்ட காணிகள் இருக்கின்ற போதும், 20 ஏக்கர் காணியை மட்டும் அடையாளப்படுத்தி சுவீகரிக்கும் முயற்சியை ஏற்றுக்கொள்ளாத காணி உரிமையாளர் காணி அளவீடு செய்ய முடியாதென்று நில அளவைத் திணைக்களத்துக்கு கடிதம் மூலம் அறிவித்தார்.
இந்நிலையில் காணி அளவீடு நிறுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து காணி உரிமையாளர், பிரதேச செயலக காணி உத்தியோகத்தர்கள், நில அளவையாளர்கள் குறித்த 10 வது விஜயபாகு படைப்பிரிவு வளாகத்தில் காணியை பார்வையிட சென்றபோது ஏற்கனவே இராணுவ தேவைக்காக குறித்த காணி அளவீடு செய்யப்பட்டுள்ளது என்றும், இராணுவத்திற்கு உரிமையான காணிக்குள் யாரும் செல்ல முடியாது என்று காணி உரிமையாளர், மற்றும் அதிகாரிகளை இராணுவம் திருப்பி அனுப்பியுள்ளனர்.
இதேவேளை குறித்த காணியானது உரிமையாளரின் அனுமதியின்றி உரிமையாளர் வெளிநாட்டிலிருந்த போது 2013 ஆம் ஆண்டு காலப்பகுதியில் அளவீடு செய்யப்பட்ட நிலையிலேயே இன்று இறுதிப் படுத்துவதற்காக நில அளவை திணைக்களம் பிரதேச செயலகத்தினுடைய கோரிக்கைக்கு அமைவாக காணியை அளவீடு செய்வதற்கு வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.



| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |