வெற்றிக்களிப்பில் ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பு
தமிழகத்தில் ஆறாவது முறையாக ஆட்சியை கைப்பற்றியுள்ள திராவிட முன்னேற்றக் கழகம், முத்தமிழறிஞர் கருணாநிதி பயிற்றுவித்ததைப் போன்று தமது கடமையை ஆற்றும் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கவுள்ள தி.மு.க மு.க.ஸ்டாலின், தனது தந்தையான கலைஞர் கருணாநிதியின் நினைவிடத்தற்கு சென்று அஞ்சலி செலுத்தியதை அடுத்து இதனைத் தெரிவித்தார்.
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற லயோலா கல்லூரிக்கு நேற்று நள்ளிரவு சென்ற திமுக தலைவர் ஸ்டாலின், கொளத்தூர் தொகுதியில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை பெற்றுக் கொண்டார்.
அதைத்தொடர்ந்து சென்னை மெரினாவில் உள்ள கருணாநிதி நினைவிடத்துக்கு சென்று வெற்றி பெற்ற சான்றிதழை வைத்து மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
அதன்பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட மு.க.ஸ்டாலின், திமுகவின் வெற்றிக்கு வித்திட்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்துடன், மக்களின் நம்பிக்கைக்கு ஏற்ப பொறுப்பை உணர்ந்து செயல்படுவோம் எனவும் குறிப்பிட்டார்.