சிறிலங்கா கடற்படையினரிடம் சிக்கிய 15 தமிழக கடற்றொழிலாளர்கள் - உடன் விடுவிக்குமாறு ஸ்டாலின் கடிதம்
சிறிலங்கா கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ள தமிழக கடற்றொழிலாளர்களையும், அவர்களது உடைமைகளையும் உடனடியாக விடுவிக்கக் கோரி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த 15 கடற்றொழிலாளர்கள் நேற்றுமுன்தினம்(9) சிறிலங்கா கடற்படையினரால் கைது செய்யப்பட்டதோடு, அவர்களது படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில், தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்கக் கோரி கடிதம் அனுப்பியுள்ளார்.
இவ்வாறு அனுப்பப்பட்ட கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“இந்தச் சம்பவம் தமிழ் நாட்டில் உள்ள கடற்றொழிலாளர் சமூகத்தினரிடையே மன உளைச்சலையும், அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
இந்திய - இலங்கைக் கடல் எல்லையை ஒட்டிய பகுதிகளில் மீன்பிடித் தொழிலை நம்பியே பல்லாயிரக்கணக்கான கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரம் அமைந்துள்ளது.
இதை தாம் (மத்திய மந்திரி ஜெய்சங்கர்) நன்கு அறிவீர்கள்.
கடற்றொழிலாளர்கள் தமது குடும்பத்தையும், சமூகத்தையும் பராமரிக்க மீன்பிடித் தொழிலை மட்டுமே நம்பியுள்ளனர்.
ஆனால் துரதிர்ஷ்டவசமாக, சிறிலங்கா கடற்படையினரால் இது போன்று கைது செய்யப்படும் சம்பவங்கள் அடிக்கடி நிகழ்ந்து வருவது கடற்றொழிலாளர்களையும், அவர்களது குடும்பத்தினரையும் ஆழ்ந்த வேதனையிலும், நிச்சயமற்ற தன்மையிலும் ஆழ்த்தியுள்ளது.
தூதரக நடவடிக்கை

சிறிலங்கா கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள நமது கடற்றொழிலாளர்களை உடனடியாக விடுவிக்கவும், பறிமுதல் செய்யப்பட்ட அனைத்து மீன்பிடிப் படகுகளையும் திரும்ப ஒப்படைக்கவும் இந்தியா மத்திய அரசு, இலங்கை அதிகாரிகளுடன் தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
தற்போது இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையில் சுமூகமான நட்புறவு பேணப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், தூதரக நடவடிக்கைகள் மூலமாகத்தான் கடற்றொழிலாளர்களின் உரிமைகள் மற்றும் வாழ்வாதாரங்களைப் பாதுகாத்திடவும், சுமூகமான தீர்வினை எய்திடவும் இயலும்.
எனவே இது தொடர்பாக இந்திய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தில் இருந்து சாதகமான பதிலை எதிர்பார்க்கிறேன்” என்றுள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் 2026
நினைவுக் குருதியில் தோய்ந்த ஊடக சுதந்திர தினம் 53 நிமிடங்கள் முன்