அதிபர் ரணிலை கடுமையாக எச்சரித்த இராஜாங்க அமைச்சர்
சிறி லங்கா பொதுஜன பெரமுன தமது (SLPP) கட்சியின் தலைவர்களுக்கு வழங்கப்படும் முக்கியத்துவத்தின் அடிப்படையிலேயே அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் என இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சனத் நிஷாந்த, தற்போதைய அரசாங்கத்தை தெரிவு செய்வதற்கு கடுமையாக உழைத்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்படாவிட்டால், சிறி லங்கா பொதுஜன பெரமுன அரசாங்கத்தில் அங்கம் வகிக்க வேண்டிய அவசியமில்லை என தெரிவித்தார்.
பாலித ரங்கே பண்டாரவின் நடத்தை
சிறி லங்கா பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட உறுப்பினர்கள், அதிபர் ரணில் விக்ரமசிங்க இதுவரையில் வழங்காத அமைச்சரவை அமைச்சுகளை கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அண்மையில் அதிபரால் கூட்டப்பட்ட அரசாங்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தையும் பெரமுன உறுப்பினர்கள் புறக்கணித்தனர்.
இது தொ்ர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த, ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கே பண்டாரவின் நடத்தை குறித்து கடுமையாக சாடியதுடன், அவரது கட்சி தலைவர் அரச தலைவராக இருப்பதன் காரணமாகவே அவரது செயற்பாடுகள் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
அதிபரை ஓரம்கட்டும் எண்ணம்
அதிபரை ஓரம்கட்டும் எண்ணம் சிறி லங்கா பொதுஜன பெரமுனவிற்கு இல்லை என தெரிவித்த சனத் நிஷாந்த, அதிபர் ரணில் விக்ரமசிங்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை கைவிட முற்பட்டால் அவருக்கு தமது ஆதரவை வழங்க மாட்டோம் என எச்சரித்துள்ளார்.
