தீர்ப்புக்கு முன்னர் ஜனாதிபதி வெளியிட்ட கருத்து! கம்மன்பில கிளப்பிய சர்ச்சை
ஜனாதிபதியின் அண்மைய செயற்பாடுகள் மற்றும் உரைகள் நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் அமைந்துள்ளதாக பிவிதுரு ஹெல உருமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில குற்றம் சாட்டியுள்ளார்.
ஒரு வழக்கின் தீர்ப்பை நீதிபதி அறிவிப்பதற்கு முன்னரே ஜனாதிபதி எவ்வாறு அறிய முடியும் எனவும் கம்மன்பில கேள்வி எழுப்பியுள்ளார்.
கொழும்பில் உள்ள சிறிலங்கா சுதந்திர கட்சியின் தலைமையகத்தில் இன்று(06.05.2026) இடம்பெற்ற மக்களின் குரல் விசேட ஊடக சந்திப்பில், கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே இதனை கூறியுள்ளார்.
நிஷாந்த ராஜபக்ச மரணம்
இது குறித்து மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
கடந்த ஏப்ரல் 30 ஆம் திகதி உயிரிழந்த அபேசிங்க ஆராச்சிலாகே ரங்க நிஷாந்த ராஜபக்ச என்பவரது மரணம் இயற்கையானது அல்ல.
அது சந்தேகத்திற்கிடமான ஒன்று என்பதை தாம் சாட்சியங்களுடன் உறுதிப்படுத்துகின்றேன்.
குறித்த மரணம் தொடர்பாக விசாரணை நடத்த சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் நான்கு விசேட வைத்தியர்கள் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டிருக்கின்றது.
இது தொடர்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் வெளியிட்ட கருத்துக்கள் உண்மைக்கு புறம்பானவை.
குறிப்பாக, உயிரிழந்தவரின் மனைவி எவ்வித முறைப்பாடும் செய்யவில்லை என காவல்துறை கூறுவது தவறானது.
ஜனாதிபதியின் அண்மைய செயற்பாடு
இது தொடர்பான மேலதிக உண்மைகளை வெளிப்படுத்த எதிர்வரும் மே மாதம் 9 ஆம் திகதி காலை 10 மணிக்கு குளியாப்பிட்டிய காவல் நிலையத்திற்கு சாட்சியங்களுடன் செல்லவுள்ளேன்.
மேலும், ஜனாதிபதியின் அண்மைய செயற்பாடுகள் மற்றும் உரைகள் நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் அமைந்துள்ளது.
மே தினக் கூட்டத்தின் போது, ஒரு வழக்கின் தீர்ப்பு மே மாதம் 25 ஆம் திகதி தமக்குச் சாதகமாக வரும் என ஜனாதிபதி பகிரங்கமாக அறிவித்திருந்தார்.
இது நீதிபதிகளுக்கு விடுக்கப்பட்ட மறைமுக அழுத்தமாகும்.
ஒரு வழக்கின் தீர்ப்பை நீதிபதி அறிவிப்பதற்கு முன்னரே ஜனாதிபதி எவ்வாறு அறிய முடியும்?
இது ஜனநாயகத்தின் தூணாக விளங்கும் நீதித்துறையின் கௌரவத்தை சீர்குலைக்கும் செயல்” என அவர் கூறியுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |