ஊடகவியலாளர்களுக்கு கடும் கட்டுப்பாடு : தமிழரசு கட்சி வசம் உள்ள பிரதேசசபை தீர்மானம்
வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபையின் அமர்வில் கலந்துகொண்டு செய்தி சேகரிக்க ஊடகவியலாளர்கள் 3 நாட்களுக்கு முன்னர் அனுமதி பெற்றுக் கொள்ள வேண்டும் என்று வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபையில் இன்று(23) தீர்மானம் ஒன்று கொண்டுவரப்பட்டுள்ளது.
இன்றைய தினம் வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை அமரவில் செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியிலாளர் சி.த.காண்டீபனுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் சபையில் நீண்ட விவாதமும் இடம்பெற்றுள்ளது.
அனுமதி கோரி கடிதம்
இதேவேளை வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபைக்கு முதலாவது சபை அமர்வு இடம்பெறுவதற்கு 15 நாட்களுக்கு முன்னர் சபை செயலாளரிடம் 6 உறுப்பினர்கள் பெயர்கள் குறிப்பிட்டு அவர்கள் பணியாற்றும் ஊடகங்களின் விபரங்கள், மற்றும் அடையாள அட்டை இலக்கம் என்பனவும் குறிப்பிடப்பட்டு தொடர்சியாக இடம்பெறும் சபை அமர்வுகளில் கலந்துகொள்ள அனுமதி கோரி சமூக மாற்றத்திற்கான ஊடக மையம் கடிதம் அனுப்பியிருந்தது.

இருந்தும் எழுத்து மூலமான பதில் ஏதும் தராத நிலையில் முதலாவது சபை அமர்விற்கு சென்றவேளை உங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை நீங்கள் 6 பேரும் தொடர்சியாக சபை அமர்வுகளில் கலந்து கொள்ளலாம் என செயலாளரால் தெரிவிக்கப்பட்டிருந்தது.
தொடர்ச்சியாக ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுப்பு
ஆனால் தொடர்ச்சியாக ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது.

இது தொடர்பாக இன்றைய தினம் சபையில் நீண்ட விவாதம் இடம்பெற்றுள்ளதாகவும், இதில் தவிசாளர் தலைமையிலான உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் எவராக இருந்தாலும் 3 நாட்களுக்கு முன்னர் அனுமதி பெற்றே சபைக்கு சமூகமளிக்க வேண்டும் என்று தீர்மானம் கொண்டுவந்துள்ளதாக அறிய முடிகிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |