பாடகர் சங்கீதனுக்கு ஆதரவாக வடக்கில் தொடரும் போராட்டம்
வவுனியா
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள சொல்லிசை பாடகர் சங்கீதன் அவர்களை உடனடியாக விடுவிக்கக் கோரி வவுனியா பழைய பேருந்து நிலையப் பகுதியில் இன்று கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
வவுனியா கலைஞர்களின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த போராட்டத்தில் அரசியல் பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது, கருத்துச் சுதந்திரத்தையும் கலைஞர்களின் உரிமைகளையும் மதிக்க வேண்டும் என வலியுறுத்திய போராட்டக்காரர்கள், சங்கீதனை நிபந்தனையின்றி விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறும் கோரிக்கை விடுத்தனர்.
பாடுவதும் ஆடுவதும் பயங்கரவாதமா
கலைஞர்கள் மீது மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் தொடர்பிலும் தமது கவலையை தெரிவித்தனர்.

பழைய பேருந்து நிலைய பகுதியில் ஆரம்பமான குறித்த போராட்டம் அங்கிருந்து மணிக்கூட்டு கோபுரசந்தி வரை ஊர்வலமாக சென்று மீண்டும் போராட்ட இடத்தை அடைந்தது.
போராட்டத்தில் கலைஞர்களுக்கும் கைவிலங்கோ, பாடுவதும் ஆடுவதும் பயங்கரவாதமா போன்ற வாசகங்கள் தாங்கிய பதாகைகளை ஏந்தியிருந்ததுடன், கோஷங்களையும் எழுப்பியிருந்தனர்.



செய்தி - கபில்
மன்னார்
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள சொல்லிசை பாடகர் சங்கீதனை விடுதலை செய்யக்கோரி இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் கிளை ஏற்பாடு செய்துள்ள போராட்டம் எதிர் வரும் வியாழக்கிழமை (11) காலை மன்னார் நகரில் இடம்பெற உள்ள நிலையில் அனைத்து தரப்பினரும் ஆதரவு வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
போராட்டத்திற்கு அழைப்பு
இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் கிளை அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை (8) மதியம் ஊடக சந்திப்பு இடம் பெற்றது.

குறித்த ஊடக சந்திப்பில் இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் கிளை தலைவர் பா.ஜேக் குமார்,கட்சியின் செயலாளர் ப.ஜஸ்ரின் துரம்,கட்சியின் மாந்தை மேற்கு பிரதேச கிளை செயலாளர் ஐ.கனேசபதி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதன்போதே குறித்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர். இதன் போது அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,
பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிராக இலங்கை தமிழரசு கட்சி மன்னார் நகர பஸ் தரிப்பிடத்திற்கு முன்பாக எதிர்வரும் 11 ஆம் திகதி வியாழக்கிழமை காலை போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளது.
குறித்த போராட்டத்தில் அனைத்து தரப்பினரும் கலந்து கொண்டு ஆதரவு வழங்க வேண்டும். பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் எமது இளைஞர்கள் கைது செய்யும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.அதன் ஒரு கட்டமாக சொல்லிசை பாடகர் சங்கீதன் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டுள்ளார்.
செய்தி - நயன்
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மனித நாகரிகத்தில் உயிர்நாடியான காடுகள்! 18 மணி நேரம் முன்