பாடசாலை ஆசிரியர் மீது மாணவன் தாக்குதல் - யாழ்ப்பாணத்தில் சம்பவம்
யாழ்ப்பாணம் ஒஸ்மானியா கல்லூரியில் பயிற்சி ஆசிரியரொருவர் மீது பாடசாலை மாணவன் ஒருவர் தாக்குதல் நடத்தியுள்ளாரென தெரிவிக்கப்படுகிறது.
இன்று செவ்வாய்க்கிழமை(24) குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ஆசிரியர் மத்தியில் அச்சநிலை
யாழ்ப்பாணம் ஒஸ்மானியா கல்லூரியில் கடந்த ஆண்டு நவம்பர் மாதமும் இதே மாணவனால் பிரச்சினை ஏற்பட்டு ஆசிரியரொருவர் மீது குறித்த மாணவனின் தந்தை தாக்குதல் மேற்கொண்டாரென தெரிவிக்கப்படுகிறது.
முன்னர் நடந்த சம்பவம் தொடர்பாக காத்திரமான நடவடிக்கை எடுக்கப்படாமை காரணமாக தொடர்ச்சியாக ஆசிரியர் மீதான தாக்குதல்கள் ஆசிரியர் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் தெரிவிக்கின்றது.
இதேவேளை, புத்தளம் - தில்லையடி முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் உடற்கல்வி ஆசிரியர் மீது சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவிருக்கும் மாணவர்களில் சிலர் சரமாரியாக தாக்கியுள்ள சம்பவம் நேற்று பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
