25 வயதான பல்கலை மாணவன் உயிரிழப்பு - தொடரும் மர்மம்
ஹோமாகமை தியகம தொழிற்நுட்ப பல்கலைக்கழகத்தில் கல்வி கற்று வந்த மாணவன் விடுதியில் மர்மமான முறையில் இறந்துள்ளதாக கஹத்துடுவ காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குருணாகல் மாவட்ட பொத்துஹெர கட்டுபொத்த நந்தன கெதர என்ற முகவரியை சேர்ந்த 25 வயதான நவும்பாலகே மலித் யயோத என்ற இரண்டாம் ஆண்டு மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இந்த மாணவன் விடுமுறையில் வீட்டுக்கு சென்று நேற்று முன்தினம் பல்கலைக்கழகத்திற்கு திரும்பியுள்ளார். இவருடன் விடுதியில் தங்கியிருந்த மற்றைய மாணவன் விடுமுறைக்கு சென்று திரும்பாத நிலையில், இந்த மாணவன் மாத்திரம் அறையில் இருந்துள்ளார்.
மரணத்திற்கான காரணம் கண்டறியப்படவில்லை

நேற்று மதியம் வரை மாணவன் அறையில் இருந்து வெளியில் வராத காரணத்தினால், மாணவனின் மற்றுமொரு நண்பன் அறைக்கு அருகில் சென்று பார்த்த போது மாணவன் உறங்குவதை கண்டுள்ளார்.
பின்னர் அவர் அறைக்குள் சென்று மாணவனை எழுந்திருக்குமாறு கூறியுள்ளார்.
மாணவன் பதிலளிக்காத காரணத்தினால், அருகில் சென்று உடலை தொட்டு பார்த்துள்ளார். உடல் குளிராக இருந்ததால், அது குறித்து பல்கலைக்கழக நிர்வாகத்தினருக்கு அறிவித்து, மாணவனை சிகிச்சைக்காக ஹோமாகமை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
அப்போது உடலை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர்.
மாணவனின் மரணத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. மரண தொடர்பான விசாரணைகள் ஹோமாகமை திடீர் மரண விசாரணை அதிகாரி சிந்தன உதய குமார மேற்கொண்டுள்ளார்.
சம்பவம் குறித்து கஹத்துடுவ காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.