மன்னார் உணவகமொன்றில் திடீர் சோதனை : இருவருக்கு நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு
மன்னாரில் (Mannar) உள்ள பிரபல உணவகம் ஒன்றின் முகாமையாளர் மற்றும் ஊழியர் ஒருவருக்கும் ஐந்து வருட ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதுடன் இருவரும் பணியாற்றிய உணவகத்துக்கு 83,000 ரூபா தண்டப்பணம் விதித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மன்னார் நீதவான் நீதிமன்றத்தால் நேற்றைய தினம் (05) இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது குறித்து தெரியவருவதாவது, “மன்னார் நகர சபை - பொது சுகாதர வைத்திய பரிசோதகரினால் மன்னார் மாவட்டத்தில் சாவற்கட்டு பகுதியில் அமைந்துள்ள பிரபல உணவகம் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை நடவடிக்கையின் போது சில சுகாதார சீர்கேடுகள் அடையாளம் காணப்பட்டன.
ஒன்பது குற்றச்சாட்டுகள்
அதாவது தலையுறை பயன்படுத்தாமை, மருத்துவ அனுமதி பெறாமை, உணவுகளை ஒழுங்கற்ற முறையில் களஞ்சியப்படுத்தியமை, கழிவு நீர் தொட்டியை உரிய முறையில் பேணாமை, சுத்தம் பேணப்படாமை போன்ற ஒன்பது குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
குறித்த வழக்கு நேற்றைய தினம் மன்னார் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட நிலையில் குறித்த சம்பவத்தில் சந்தேக நபர்களாக அடையாளப்படுத்தப்பட்ட உணவகத்தின் முகாமையாளர் மற்றும் ஊழியருக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனையும் உணவகத்துக்கு தண்டப்பணமும் விதிக்கப்பட்டது.
இதேவேளை மன்னார் - தலைமன்னார் வீதியில் அமைந்துள்ள பல்பொருள் அங்காடி ஒன்றில் மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற 200,000 ரூபா பெறுமதியான பிஸ்கட்டுகள் கைப்பற்றப்பட்டு மன்னார் நகரசபை பொது சுகாதார வைத்திய பரிசோதகர் முன்னிலையில் அழிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

விடுதலைப் புலிகளின் வைப்பகத்தில் இருந்து மீட்கப்பட்ட தங்க நகைகள் : அரசுக்கு செல்வம் எம்.பி. அழுத்தம்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


