ரணிலுக்கான ஆதரவு நாட்கள் -பொதுஜன பெரமுன வெளியிட்ட தகவல்
சவால்களை சிறப்பான எதிர்கொள்ளும் ரணில்
நாட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தீர்க்கப்பட்டுவருகின்றன. சவால்களை அதிபர் ரணில் சிறப்பாக எதிர்கொள்கின்றார். அடுத்த இரு வருடங்களுக்கு அவருக்கு ஆதரவு வழங்கப்படும். தவறுகளை திருத்திக்கொண்டு பொதுஜன பெரமுன வெற்றிநடைபோடும் என்று மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.
முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவின் ஏற்பாட்டில் சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாவலப்பிட்டிய தொகுதி ஆசனக் கூட்டம் கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ச தலைமையில் இன்று (16) நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே மஹிந்தானந்த இவ்வாறு குறிப்பிட்டார்.அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

இன்று நடைபெறும் கூட்டம் மாவட்டக் கூட்டம் அல்ல, ஒரு தொகுதி கூட்டமாகும். ஆனாலும் மக்கள் அணிதிரண்டுள்ளனர். தாங்கள் இன்னமும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன்தான் நிற்கின்றோம் என்ற தகவலை அவர்கள் வழங்கியுள்ளனர். ஒரு சிலர் எம்மைவிட்டு சென்றிருக்கலாம். ஆனால் எமது கட்சி பலமாகவே உள்ளது.
எந்நேரத்தில் வேண்டுமானாலும், எந்தவொரு தேர்தலையும் எதிர்கொள்வதற்கு சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சி தயாராகவே உள்ளது.
தேர்தலை எதிர்கொள்ள தயார்

நாவலப்பிட்டிய தொகுதியிலும் வெற்றிக்கொடி பறக்கும்.
கண்டி மாவட்டமும், நாவலப்பிட்டிய தொகுதியும் தயார் என்ற செய்தி இக்கூட்டம்மூலம் வழங்கப்படுகின்றது. தேர்தல் நடத்தப்பட்டால் வெற்றி நிச்சயம் என்பதையும் கூறிவைக்க விரும்புகின்றோம் எனத் தெரிவித்தார்.