அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தத்திற்கான ஆதரவு - விமல் வெளியிட்ட தகவல்
நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தத்தில் மேலதிக திருத்தங்கள் மேற்கொள்ளப்படாமல் இருக்குமாயின் அதை தாம் ஆதரிப்பதாக உத்தர லங்கா கூட்டணி தெரிவித்துள்ளது.
இரட்டைக் குடியுரிமையை இலங்கையில் இல்லாது செய்ய அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தத்தை நாட்டில் கட்டாயம் நடைமுறைப்படுத்த வேண்டுமென கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச கட்சிக் கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
இரட்டைக் குடியுரிமை
இலங்கையில் இரட்டைக் குடியுரிமை தேவை என நினைப்பவர்கள் மாத்திரமே அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தத்தை எதிர்ப்பார்கள் என உத்தர லங்கா கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச கூறியுள்ளார்.
இலங்கையின் ஆட்சியை மாற்றுவதற்கான சதித்திட்டங்களில் முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச ஈடுபட்டிருந்தார் எனவும் தற்போது சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் ஏனைய அரசியல்வாதிகள் மீது வீண் பழி சுமத்துகிறார்கள் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
டலஸ் அழகப்பெருமவுடன் கூட்டணி
நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெருமவுடன் உத்தர லங்கா கூட்டணி இணைந்து செயற்படுவது குறித்த கலந்துரையாடல்கள் இந்த வாரம் நடைபெறும் என விமல் வீரவன்ச குறிப்பிட்டுள்ளார்.
சிறிலங்கா அரசாங்கம் அநாவசியமான காரணங்களை முன்வைத்து தேர்தலை ஒத்திவைக்காது எதிர்வரும் மார்ச் மாதத்துக்குள் தேர்தலை நடத்த வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில வலியுறுத்தியுள்ளார்.