ட்ரம்பின் அமெரிக்க குடியுரிமை மாற்ற சட்டம்: உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு
பிறப்பின் அடிப்படையில் அமெரிக்க (America) குடியுரிமை பெறுவதில் மாற்றம் செய்து ட்ரம்ப் (Donald Trump) கையொப்பமிட்ட நிா்வாக உத்தரவுக்கு நாடு முழுவதும் விசாரணை நீதிமன்றங்கள் தடை விதிக்க முடியாது என அந்நாட்டு உச்சநீதிமன்றம் தீா்ப்பளித்தது.
அமெரிக்காவில் பிறந்த எவரும் அந்நாட்டு குடிமகன் என்பதற்கு அமெரிக்காவின் பிறப்புரிமை குடியுரிமை உத்தரவாதம் அளிக்கின்றது.
இந்தக் குடியுரிமை என்பது அமெரிக்க அரசமைப்புச் சட்டத்தின் 14 ஆவது திருத்தத்தை அடிப்படையாகக் கொண்டது.
சட்ட ஆவணங்கள்
இது பிற நாடுகளில் இருந்து உரிய சட்ட ஆவணங்கள் இல்லாமல் அமெரிக்காவில் குடியேறியவா்களுக்கும், தற்காலிகமாக அமெரிக்கா சென்றவா்களுக்கும் அந்நாட்டில் பிறக்கும் குழந்தைகளுக்கு அமெரிக்க குடியுரிமையைப் பெற வழிவகுத்துள்ளது.
இவ்வாறு குடியுரிமை பெறுவதில் மாற்றங்களை செய்யும் நிா்வாக உத்தரவில் கடந்த ஜனவரியில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கையொப்பமிட்டாா்.
இந்தநிலையில், அமெரிக்காவில் பிறக்கும் குழந்தைகளின் பெற்றோா் அந்நாட்டில் உரிய அனுமதியின்றி சட்டவிரோதமாக இருந்தாலோ அல்லது தற்காலிகமாக தங்கியிருந்தாலோ, அந்தக் குழந்தைகளுக்கு அமெரிக்க குடியுரிமையை வழங்கக் கூடாது என தெரிவிக்கப்பட்டது.
இந்த உத்தரவு அமெரிக்க அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்று பல்வேறு தரப்பினா் எதிா்ப்புத் தெரிவித்த நிலையில், இதுதொடா்பான வழக்குகளை விசாரித்த அந்நாட்டு விசாரணை நீதிமன்றங்கள், அந்த உத்தரவை நாடு முழுவதும் நடைமுறைப்படுத்த தடை விதித்தன.
மனுக்கள் தாக்கல்
இந்தத் தடைக்கு எதிராக அந்நாட்டு உச்சநீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இந்த மனுக்களை விசாரித்த ஒன்பது நீதிபதிகள் அடங்கிய அமா்வில் ஆறு நீதிபதிகள் தங்களது தீர்ப்பை அறிவித்துள்ளனர்.
இதனடிப்படையில், “நீதிமன்றத்தை அணுகுபவா்களுக்கான உத்தரவை மட்டுமே விசாரணை நீதிமன்றங்கள் பிறப்பிக்க முடியும் ஆனால், அனைவருக்கும் உத்தரவு பிறப்பித்து தங்கள் அதிகார வரம்பை தாண்டி அந்த நீதிமன்ற நீதிபதிகள் செயல்படுகின்றனா்.
ஒரு சட்டத்துக்கு நாடு முழுவதும் விசாரணை நீதிமன்றங்கள் தடை விதிக்க முடியாது அதற்கான அதிகாரத்தை விசாரணை நீதிமன்றங்களுக்கு நாடாளுமன்றம் வழங்கவில்லை” என தெரிவித்துள்ளனர்.
அத்தோடு, மூன்று நீதிபதிகள் மாறுபட்ட தீா்ப்பை அளித்த நிலையில், பெரும்பான்மை நீதிபதிகளின் தீா்ப்பு ஏற்கப்பட்டது.
ட்ரம்ப்பின் உத்தரவு
இருப்பினும், ட்ரம்ப்பின் உத்தரவை 30 நாள்களுக்கு நிறுத்திவைத்த உச்சநீதிமன்றம், அதற்குள் தங்கள் உத்தரவில் திருத்தம் மேற்கொள்ளவோ அல்லது சட்ட ரீதியாக மேல் நடவடிக்கை எடுக்கவோ விசாரணை நீதிமன்றங்களுக்கு அவகாசம் அளித்தது.
உத்தரவு சட்டப்படி செல்லுபடியாகுமா மற்றும் அமெரிக்க குடியுரிமை கிடைப்பதில் ட்ரம்ப் செய்த மாற்றம் அரசமைப்புச் சட்டப்படி செல்லுபடியாகுமா என்பது குறித்து உச்சநீதிமன்றம் எதுவும் தெரிவிக்கவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.
அதுதொடா்பான வழக்கு நடைமுறைகள் குறித்த தீா்ப்பை மட்டுமே உச்சநீதிமன்றம் அளித்தது.
எனவே, ட்ரம்ப்பின் உத்தரவுக்கு தற்போது தடை இருந்தாலும் நீதிமன்றங்கள் மீண்டும் தலையிடாவிட்டால், அந்த உத்தரவை நடைமுறைப்படுத்ததுவதற்கான வழி தெளிவாகியுள்ளதாகவும் ஆனால், அதுதொடா்பான வழக்குகள் நீண்ட காலம் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
