தாய்வானை தனிமைப்படுத்த சீனா நினைத்தால் அது நடக்காது! பகிரங்கமாக அறிவித்தது அமெரிக்கா
சீனா தாய்வானை தனிமைப்படுத்த அமெரிக்கா அனுமதிக்காது என அமெரிக்க மக்கள் பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் நான்சி பெலோசி தெரிவித்துள்ளார்.
ஜப்பானின் தலைநகரான டோக்யோவில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் நேற்றைய தினம் (05) நடைபெற்ற நிகழ்ச்சியில் உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
மேலும், எங்களுடைய பயண நிரலை வடிமைப்பது சீனா கிடையாது. அமெரிக்க அரசியல் தலைவர்கள் தாய்வானுக்கு செல்வதைத் தடுக்கும் வகையில் அவர்களுக்கு எதிராக சீனா தடை விதித்தாலும், அந்த நாடு, தாய்வானை தனிமைப்படுத்த அனுமதிக்க மாட்டோம்’ என கூறினார்.
பயிற்சியை மீண்டும் தொடங்கியுள்ள சீனா
தாய்வானின் வடக்கு, தென்மேற்கு மற்றும் கிழக்கு கடல் பகுதியில் போர் ஒத்திகையை மீண்டும் தொடங்கியுள்ளதாக சீன ராணுவத்தின் கிழக்கு படைப்பிரிவு தலைமையகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், விமானப்படை மற்றும் கடற்படையின் போர் தளபாட திறன்களை பரிசோதிக்கும் நடவடிக்கையாக தாய்வானைச் சுற்றிலும் குண்டுகள் வீசி பயிற்சி நடத்தப்படுவதாக சீனா விளக்கம் அளித்துள்ளது.
இதேவேளை, அமெரிக்காவுக்கான சீன தூதரை நேற்று வெள்ளை மாளிகை உயரதிகாரிகள் அழைத்துள்ளதாக வெளிநாட்டு நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.