ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் எல்லை தொடர்பில் பனிப்போர்! தலிபான்களிடமிருந்து வந்த கடுமையாக எச்சரிக்கை
பாகிஸ்தானுக்கும் - ஆப்கானிஸ்தானுக்கும் இடையே 2,670 கி.மீ. நீளம் சர்வதேச எல்லை உள்ளது. இதில் இருநாடுகள் இடையே பிரச்சினை இருந்து வருகிறது. கடந்த மாதம் பாகிஸ்தான் படையினர் நிம்ரோஸ் மாகாணத்தில் முள்வேலிகளை விரிவுபடுத்த முயற்சித்தனர். இதை தலிபான் படை வீரர்கள் தடுத்து நிறுத்தியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நங்கர்ஹார் மாகாணத்தில் இதே போன்று பாகிஸ்தான் படை வீரர்கள் முள்வேலி அமைக்க முயன்றபோதும் பிரச்சினை ஏற்பட்டுள்ளது எனவும் அச்செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா மக்மூத் (Shah Mahmood) கருத்து தெரிவிக்கையில்,
சில விசமிகள் தேவையில்லாமல் பிரச்சினை எழுப்புகிறார்கள். நாங்கள் அதை கவனித்து வருகிறோம். நாங்கள் ஆப்கானிஸ்தான் அரசாங்கத்துடன் தொடர்பில் உள்ளோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயம் குறித்து தலிபான் படை தளபதி சனவுல்லா சாங்கின் (Sanaullah Sangin) கருத்துத் தெரிவிக்கையில்,
நாங்கள் எந்த நேரத்திலும் எந்த வடிவத்திலும் வேலி அமைப்பதை அனுமதிக்க மாட்டோம். இனி எந்த வேலியும் அமைக்கக்கூடாது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானில் தலிபான்களுக்கு ஆதரவாக பாகிஸ்தான் குரல் கொடுத்து வந்த நிலையில் இப்போது அவர்களுக்கு இடையே மோதல் போக்கு உருவாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.