“தமிழ் மொழியின் தாயகம் இந்தியா” பிரதமர் நரேந்திர மோடி புகழராம்
உலகின் மிகப் பழமையான மொழியான, தமிழ் மொழியின் தாயகம் என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
மகாகவி பாரதியாரின் 100ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது.
இதையொட்டி, பிரதமர் மோடி வெளியிட்டுள்ள செய்தியில், சிறப்பு வாய்ந்த சுப்பிரமணிய பாரதியின் 100ஆவது நினைவு தினத்தில் அஞ்சலி செலுத்துவதாகவும், இந்த நினைவு தினத்தில் அவரது பெரும்புலமை, நாட்டுக்கு ஆற்றிய பன்முகப்பங்களிப்பை நினைவில் கொள்வதாகவும் கூறியுள்ளார்.
சமூக நீதி, பெண்களுக்கு அதிகாரமளித்தல் மீதான நன்னெறிகளை நினைவில் கொள்வோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இன்று, சுப்பிரமணிய பாரதியின் 100 ஆவது நினைவு நாளில் அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக காசியின் பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் தமிழுக்கான சுப்பிரமணிய பாரதி அமர்வு நிறுவப்படும் என்றும் பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.