மாகாணமுறை நிர்வாகத்தை நடைமுறைப்படுத்த தமிழ்த் தலைமைகள் செயல்வடிவம் கொடுக்க வேண்டும்! துரைரெத்தினம் கோரிக்கை
கடந்த காலத்தில் மாகாணசபை தொடர்பாக விட்ட தவறுகளை சுயவிமர்சனம் செய்து கொண்டு எதிர் காலத்தில் நாடாளுமன்றத்தில் அனுமதிக்கப்பட்டுள்ள 13ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்த ஒத்துழைக்க வேண்டுமென முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரத்தினம் (Ira.Turairettinam) வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுதொடர்பில் அவர் தெரிவித்துள்ளதாவது,
மாகாணமுறை நிர்வாகம் 1990ம் ஆண்டு இருந்து இன்றுவரையும் நடைமுறையில் உள்ளன. இது நாடாளுமன்றத்தில் சட்டத்திருத்தத்தில் உள்ளடக்கப்பட்ட ஒரு அரசியல் அதிகாரமாகும்.
இது இலங்கையில் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படுகின்றன. 13ன்றைப் பொறுத்தவரையில் சிறுபான்மை இனத்திற்காக வடக்கு, கிழக்கை இணைத்து ஒரு மாகாண சபையாக இயங்கி வந்தது.
இந்நிலையில் பல அதிகாரங்கள் மாகாணசபை நிருவாகத்தின் கீழ் உள்ளடக்கப்பட்டன. இது காலப்போக்கில் இனவாத அரசினால் சில அதிகாரங்கள் இல்லாமலாக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக இணைக்கப்பட்ட வடக்கு ,கிழக்கு மாகாணசபை 30.06.2006ம் ஆண்டு காலகட்டத்தில் இணைந்த முறமை தவறென பெரும்பான்மை இனத்தைச் சார்ந்த ஒருவரினால் வடக்கு ,கிழக்கு மாகாணசபை நிருவாகம் கிழக்கு வேறாக வடக்கு வேறாக பிரிக்கப்பட்டது.
இத்தோடு மாகாண நிருவாகத்திற்கென உள்ளடக்கப்பட்ட அதிகாரங்களான பிரதேச செயலகத்திற்கு கட்டுப்பட்ட சில அதிகாரங்கள் இல்லாமலாக்கப்பட்டது.
காவல்துறை அதிகாரங்கள், காணி அதிகாரங்கள், நிதி தொடர்பான அதிகாரங்கள், விவசாய நீர்பாசனத்தோடு சம்பந்தப்பட்ட அதிகாரங்கள், பொதுச்சேவை, பொதுநிருவாகத்தின் கீழுள்ள அதிகாரங்களை மத்திய அரசு கையில் எடுத்துக் கொண்டது.
குறிப்பிட்ட அதிகாரங்களை எடுத்துக் கொண்டாலும் இன்னும் சில விடயங்களில் மாகாணசபை முறமையின் கீழுள்ள நிலையில் முன்பு இல்லாமல் இருக்கும் தமிழர்கள் ஆகிய நாங்கள் உள்ளதை சிறப்பாக செய்வதற்கு முயற்சிக்க வேண்டும்.
அரசு சிறுபான்மை இனத்திற்கு எதிரான அதிகாரத்தை இல்லாமலாக்குகின்ற புதிய அதிகாரத்தை தர மறுக்கின்ற செயல்வடிவத்தை செய்வதற்கும் சர்வதேச அங்கீகாரத்தை பெற்றுக் கொண்ட சர்வதேசத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்ட 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த தமிழ்த் தலைமைகள் செயல்வடிவம் கொடுக்க வேண்டும்.